

இந்தியாவில் ரெயில் பயணம் என்பது மக்களிடையே மிகவும் பிரபலமான ஒரு போக்குவரத்து வசதி ஆகும். தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரெயில்களில் பயணம் மேற்கொள்கின்றனர். மற்ற போக்குவரத்து முறைகளை விட ரெயில் பயணம் பாதுகாப்பானது, டிக்கெட் செலவு குறைவு, வேகம், மேலும் உடமைகளை பத்திரமாக எடுத்துச் செல்ல முடியும் என்பது போன்ற பல்வேறு காரணங்களுக்காக மக்கள் அதிகம் விரும்புவது இந்த ரெயில் பயணத்தை தான். அதிலும் பண்டிகை காலங்களில் பேருந்து கட்டணத்தை விட ரெயில் கட்டணம் மிகவும் குறைவு என்பதால் அதிக மக்கள் இதில் பயணம் செய்யவே விரும்புகின்றனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் ரெயில் கட்டணத்தை உயர்த்த உள்ளதாகவும், வரும் 26-ம்தேதி முதல் புதிய ரெயில் கட்டணம் அமலுக்கு வர உள்ளதாகவும் ரெயில்வே துறை அறிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் ரெயில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக தற்போது மீண்டும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கட்டண உயர்வு அனைத்துப் பயணிகளுக்கும் பொருந்தாது என்றும் சில முக்கிய நிபந்தனைகளும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ரெயிலில் 215 கி.மீ. தொலைவுக்கு un reservation எனப்படும் சாதாரண வகுப்பில் பயணிக்கும் பயணிகளுக்கு கட்டணத்தில் எவ்வித உயர்வும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் 215 கி.மீ. தொலைவுக்கு மேல் சாதாரண வகுப்பில் பயணிக்கும் பயணிகளுக்கு கி.மீட்டருக்கு 1 பைசா கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.
215 கி.மீட்டருக்கு மேல் எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில் ரெயில்களில் ஏசி வசதி உள்ள பெட்டிகள் மற்றும் ஏசி வசதி இல்லாத பெட்டிகளிலும் கி.மீட்டருக்கு 2 பைசா கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.
ஏசி வசதி இல்லாத பெட்டிகளில் 500 கி.மீட்டர் வரை பயணிப்பவர்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
ரெயில்களுக்கு ஏற்ப இந்த டிக்கெட் விலையில் மாற்றம் இருக்கும். இதனால் புக்கிங் கட்டணத்துடன் சேர்த்து ரூ.10 உயரும் என்று தெரிய வந்துள்ளது.
ரெயில்வே ஊழியர்கள் சம்பள உயர்வு, ஓய்வூதியம், நடைமுறை செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று ரெயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இருப்பினும், புறநகர் ரெயில்கள் மற்றும் மாதாந்திர பயணச் சீட்டுக்கான கட்டணங்களில் எவ்வித உயர்வும் இல்லை என்று இந்திய ரெயில்வே அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் இந்த கட்டண உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 600 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
ரெயில் கட்டணத்தை உயர்த்தும் நிலையில், பயணிகளுக்கான வசதிகளில் ரெயில் நிலைய பராமரிப்பு, கழிவறை, தங்கும் வசதிகள், லிப்ட், எஸ்கலேட்டர் போன்றவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இவற்றின் மூலம் பயணிகளுக்கு சிரமமில்லாத பயணத்தை உறுதி செய்ய வேண்டும்.
சென்னையில் போன்ற நகர்புறங்களில் அதிகளவிலான மக்கள் வேலை, கல்வி மற்றும் அத்தியாவசிய தேவைக்காக புறநகர் ரெயில்களை அதிகம் பயன்படுத்தி வரும் நிலையில் இவர்களுக்கான டிக்கெட் கட்டணத்தில் எந்தவித மாறுதலும் இல்லை எனக் கூறியிருப்பது பெரிதும் வரவேற்கக்தக்கது என்று மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.