ரயிலில் இருந்து கைவிலங்குடன் தப்பிய நபர்! 28 வருடங்கள் கழித்து டெல்லி போலீசில் சிக்கியது எப்படி?

28 ஆண்டுகளாக காவல்துறையின் கண்களில் மண்ணைத் தூவி தப்பிய 'டாக்டர் ஜட்கா'!: மத்தியப் பிரதேசத்தில் டெல்லி போலீஸாரின் அதிரடி கைது நடவடிக்கை!
28 ஆண்டுகள் தலைமறைவு குற்றவாளி கைது
28 ஆண்டுகள் தலைமறைவு குற்றவாளி கைது
Updated on

28 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலைக் குற்றவாளி கைது

மாநிலம் விட்டு மாநிலம் தப்பியோடிய ‘டாக்டர் ஜட்கா’வின் திடுக்கிடும் வாழ்க்கை..கிட்டத்தட்ட 28 ஆண்டுகளாக காவல்துறையின் கண்களில் மண்ணைத் தூவி தலைமறைவாக வாழ்ந்த குற்றவாளி ஒருவரை, டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு அதிகாரிகள் பல மாநிலங்களில் நடத்திய தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு கைது செய்துள்ளனர். இந்த கைது, இந்திய காவல்துறையின் நீண்டகால தேடுதல் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

போலீஸ் அதிகாரி கொலை வழக்கில்,கிட்டத்தட்ட 28 ஆண்டுகளாக போலீஸ் கண்ணில் மண்ணை தூவி சட்டத்திலிருந்து தப்பித்து, மத்திய பிரதேசத்தில் திருமணம் செய்து மருத்துவராக குடும்பத்துடன் அமைதியாக வாழ்ந்து வந்த நபரை டெல்லி போலீசார் இறுதியாக கைது செய்துள்ளனர்.

அவரைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள் இதோ:

கைது செய்யப்பட்டவர் ராஜிந்தர் பைராகி. வயது 53. இவர் தன்னுடைய தலைமறைவு வாழ்க்கையின்போது, ராஜேந்தர் சிங் யாதவ் மற்றும் "டாக்டர் ஜட்கா" என்ற போலிப் பெயர்களிலும் வாழ்ந்து வந்துள்ளார்.

1998-ஆம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில், ஹரியானா மாநில காவல்துறையைச் சேர்ந்த ஜெய் பகவான் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்தார் இந்தராஜிந்தர் பைராகி. இதுமட்டுமல்லாமல், டெல்லி மற்றும் ஹரியானாவில் பதிவான பல கொலை முயற்சி வழக்குகளிலும் இவருக்குத் தொடர்பு இருப்பதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

போலிஸ் இவரைப் பிடித்து, உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் சிறையில் அடைத்தது. ஒரு வழக்கு தொடர்பாக 1999-ஆம் ஆண்டு ஹரியானா நீதிமன்றத்துக்கு கைவிலங்குடன் ரயிலில் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, கன்னௌர் ரயில் நிலையத்தில் காவல்துறையினரிடமிருந்து இவர் தப்பிச் சென்றார். அதன் பின்னர் 28 ஆண்டுகள் அவர் எங்கே இருக்கிறார் என்பது தெரியாமலேயே இருந்தது.

இறுதியில், வடக்கு டெல்லி காவல்துறையின் கிரைம் பிராஞ்ச், பிரிவு, தொழில்நுட்ப கண்காணிப்பு, உளவுத்தகவல் சேகரிப்பு மற்றும் பல மாநிலங்களில் மேற்கொண்ட ரகசிய நடவடிக்கைகளின் மூலம், மத்தியப் பிரதேசத்தின் அசோக் நகர் மாவட்டத்திலுள்ள முங்காவ்லி பகுதியில் அவரை போலிஸ் கைது செய்தது.

அவரிடம் போலிசார் தீவிரமாக நடத்திய விசாரணையில், தப்பியோடிய பிறகு முதலில் மகாராஷ்டிராவில் தங்கி, ஒரு கேந்திரிய வித்யாலயாவில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றியதாகவும், பின்னர் மத்தியப் பிரதேசத்தில் நிரந்தரமாக குடியேறி ரியல் எஸ்டேட் துறையில், வியாபாரம் செய்ததாகவும் தெரியவந்தது. அது மட்டுமின்றி, "டாக்டர் ஜட்கா" என்ற பெயரில் போலி டாக்டராக இவர் உள்ளூர் மக்களுக்கு மருத்துவம் பார்த்த திடுக்கிடும் தகவலும் வெளியாகி உள்ளது.

தன்னுடைய உண்மையான அடையாளத்தை மறைப்பதற்காக ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து அரசு ஆவணங்களையும் போலியான விவரங்களின் அடிப்படையில் இவர் பெற்றிருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.தற்போது அவர் மீது நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளும் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. மேலும், கடந்த 28 ஆண்டுகளில் வேறு ஏதேனும் குற்றங்களில் ஈடுபட்டாரா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

ராஜிந்தர் மீது கொலை, கொலை முயற்சி, திருட்டு மற்றும் சட்டபூர்வ காவலில் இருந்து தப்புதல் உள்ளிட்ட குறைந்தது 8 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

காலம் கடந்தாலும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த முடியும் என்பதற்கு இந்த கைது எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பெண் கல்வித் தாகம்: ஏமாற்றமா அல்லது எதார்த்தமா? 'அருள்வான்' படத்தின் முழுமையான விமர்சனம்!
28 ஆண்டுகள் தலைமறைவு குற்றவாளி கைது
logo
Kalki Online
kalkionline.com