இந்திய ரிசர்வ் வங்கி (RBI)மக்களின் சுவையை குறைக்கும் வகையில் டிஜிட்டல் பேமெண்ட் (Digital Payment)நடைமுறைகளில் பல்வேறு அதிரடி மாற்றங்களை அவ்வபோது அறிவித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை எளிதாக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி தொடர் கட்டணங்களுக்கான (Recurring Payments) புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த புதிய விதிமுறைகள் நம்முடைய யுபிஐ பரிவர்த்தனைகள் உள்ளிட்ட அனைத்து ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு பொருந்தும்.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2026-ல் வெளியிட்ட புதிய இ-மேண்டேட் (e-mandate) விதிகளின்படி, கிரெடிட்/டெபிட் கார்டு, UPI மூலம் நடைபெறும் தொடர் கட்டணங்களுக்கு (Recurring Payments) ரூ.15,000 வரை OTP தேவையில்லை என்று அறிவித்துள்ளது.
முதல்முறை பதிவு செய்யும்போது மட்டும் சரிபார்ப்பு (AFA) போதும், பின் 24 மணி நேரத்திற்கு முன் அறிவிப்புடன் பணம் தானாக கழிக்கப்படும்.
பணம் கழிக்கப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே வங்கி உங்களுக்கு குறுஞ்செய்தி (SMS) அல்லது மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பும்.
அதில் வணிகரின் பெயர், பரிவர்த்தனைத் தொகை, தேதி மற்றும் நேரம் போன்ற விவரங்கள் அடங்கியிருக்கும். இந்தத் தகவலைப் பார்த்த பிறகு, உங்களுக்கு விருப்பமில்லை என்றால் அல்லது தவறுதலாக இருந்தால் அந்தப் பரிவர்த்தனையை உடனடியாக ரத்து செய்யலாம்.
வாடிக்கையாளர்கள் தங்களின் தானியங்கி கட்டணச் சேவையை எப்போது வேண்டுமானாலும் நிறுத்தி வைக்கவோ, மாற்றவோ அல்லது முழுமையாக ரத்து செய்யவோ முடியும்.
இந்த விதிமுறைகள் இந்தியாவிற்குள் மட்டுமின்றி, வெளிநாட்டு பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.
இனிமேல் ரூ.15,000 வரையிலான தானியங்கி பரிவர்த்தனைகளுக்கு ஒவ்வொரு முறையும் OTP தேவையில்லை. ரூ.15,000-க்கு அதிகமான தொகைக்கு வழக்கம்போல OTP அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்சூரன்ஸ் பிரீமியம், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள், கிரெடிட் கார்டு பில் கட்டணங்கள், OTT சந்தாக்கள்(Subscriptions), பயன்பாட்டு பில்கள் (Utility Bills) மற்றும் மாதத் தவணைகளுக்கு (EMI) போன்றவற்றுக்கு ரூ.15,000 வரையிலான தொகையைச் செலுத்த ஒவ்வொரு முறையும் ஓடிபி (OTP) பதிவிடத் தேவையில்லை.
இந்த இ-மேண்டேட் (e-mandate)சேவையைப் பயன்படுத்துவதற்கு வங்கிகளோ அல்லது கட்டண தளங்களோ வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
மோசடிகளைத் தடுக்க, இந்த இ-மேண்டேட் முறையில் ஏதேனும் தவறு நடந்தால், அதை உடனுக்குடன் புகாரளிப்பதன் மூலம் பணத்தைப் பாதுகாக்கும் வசதி உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை எளிதாக்கவும், தொடர் பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மை, கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதன் மூலம், டிஜிட்டல் பணம் செலுத்துதல் மீதான நுகர்வோர் நம்பிக்கையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.