

தங்க நகைக்கடன் (Gold Loan) என்பது அவசரத் தேவைக்கு, நம்மிடம் உள்ள நகைகளை வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் பிணையமாக வைத்து, குறைந்த வட்டியில் உடனடியாகக் கடன் பெறும் ஒரு பாதுகாப்பான வழியாகும். இன்றைய காலகட்டத்தில் சாமானிய மக்கள் முதல் பெரும் செல்வந்தர்கள் வரை அனைவருக்குமே பணத்தேவை இருக்கிறது. எதிர்பாராத செலவுகள் அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில், தங்கக் நகைக் கடன்கள் சரிபார்ப்பு இல்லாமல் சில மணி நேரங்களுக்குள் கிடைக்கிறது. அதேபோல மற்ற கடன்களை ஒப்பிடும்பொழுது இதற்கான வட்டி விகிதங்கள் குறைவாகவே இருக்கும் என்பதால் பெரும்பாலான மக்களின் விருப்பத்தேர்வாகவும் உள்ளது. மேலும் இந்தக் கடனைப்பெற எந்த கிரெடிட் ஸ்கோரும் தேவையில்லை.
அந்த வகையில் இந்தியாவில் உள்ள நடுத்தர மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு நிதி நெருக்கடி ஏற்படும்போது, அவர்கள் தங்களிடம் உள்ள தங்க நகையை அடமானம் வைத்து தங்களது நிதிதேவையை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.
அதாவது, திடீர் உடல்நலக்குறைவு, திருமணச் செலவுகள் அல்லது வியாபார நஷ்டம் போன்ற இக்கட்டான காலங்களில், நடுத்தர வர்க்க மக்களுக்குத் தங்கம் பாதுகாப்பான சொத்தாக விளங்குகிறது.
ஆனால் நகைக் கடன் எளிதாகக் கிடைக்கிறது என்பதற்காக நீங்கள் கண்மூடித்தனமாக ஏதாவது ஒரு இடத்தில் நகையை அடகு வைத்து கடன் பெற்றால் அது உங்களுக்கு அதிக நன்மையைத் தராமல் போகலாம்.
இந்நிலையில் நடுத்தர மக்களின் வசதிக்காக, ஏப்ரல் 1 முதல், தங்க நகைகள் மீதான கடன்களுக்கான விதிகளில் ஆர்பிஐ(RBI) முக்கிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
இதற்கு முன்பு வரை, வங்கிகள் அல்லது வெளி நிதி நிறுவனங்களில் தங்க நகையை அடமானம் வைத்து கடன் வாங்கி இருப்பீங்க. அப்போது உங்களது தங்கத்தின் மொத்த மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே கடனாக கிடைத்திருக்கும். ஆனால் ஏப்ரல் 1-ம்தேதியில் இருந்து ஆர்பிஐ கொண்டு வந்துள்ள புதிய விதிகளின்படி, உங்களுடைய தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதத்தை கடனாகப் பெற முடியும் என அறிவித்துள்ளது.
அதன்படி அரசாங்கமும், வங்கிகளும் வாடிக்கையாளரின் கடன் தொகையைப் பொறுத்து, மூன்று அடுக்குகளை உருவாக்கியுள்ளன.
அதாவது நீங்கள் ரூ.2.5 லட்சம் வரையிலான நிதி தேவைக்கு தங்கத்தை அடமானம் வைத்தால், அந்தத் தங்கத்தின் மொத்த மதிப்பில் 85 சதவீதமும், கடன் தேவை ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை இருந்தால், தங்கத்தின் மதிப்பில் 80% உங்களுக்குக் கிடைக்கும்.
அதேசமயம், ரூ.5 லட்சத்திற்கு மேல் கடன் தேவைப்பட்டால் பழைய விதிகளின்படி, உங்கள் தங்கத்தின் மதிப்பில் 75% மட்டுமே கடனாகக் கிடைக்கும் என்றும் ஆர்பிஐ தெளிவுபடுத்தி உள்ளது.
இதற்கு முன்பு நீங்கள் ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அடமானம் வைத்திருந்தால், உங்களுக்கு ரூ.3.75 லட்சம் மட்டுமே கடனாகக் கிடைத்திருக்கும். ஆனால், புதிய விதிகளின்படி, அதே ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்கத்திற்கு ஏப்ரல் 1 முதல் ரூ.25,000 கூடுதலாக அதாவது, நீங்கள் ரூ.4 லட்சம் வரை கடன் பெற முடியும். இது நடுத்தரக் குடும்பங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
ஆர்பிஐ கொண்டுவந்துள்ள இந்த புதிய விதி மாற்றப்பட்டுள்ளதால், நடுத்தர மக்கள் குறைந்த அளவு தங்கத்தை அடமானம் வைத்து அதிக கடன் பெற முடிகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய நிதி நிவாரணத்தை வழங்கியுள்ளது என்றே சொல்லலாம்.
அதேபோல் மக்கள் அதிகமான வட்டி கேட்கும் தனிநபர் அடகுக் கடைகளைத் தவிர்த்து, அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் அல்லது NBFC-களில் அடகு வைப்பது பாதுகாப்பானது என்றும் ஆர்பிஐ கூறியுள்ளது.
இந்த விதிகள் கடந்த ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளதால், தங்கக் கடன் வாங்குபவர்களுக்கு இது உண்மையிலேயே ஒரு இரட்டைப் பலன் தரும் சலுகையாக பார்க்கப்படுகிறது.