

இந்திய அளவில் அதிவேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ரியல் எஸ்டேட் துறையும் ஒன்று. கிராமங்களைக் காட்டிலும் நகரங்களில் நிலங்கள் மற்றும் வீடுகளின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதற்கு மிக முக்கிய காரணமாக அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியைக் கூறலாம். இருப்பினும் ரியல் எஸ்டேட் இந்த அளவுக்கு வளர்ந்து நிற்பதற்கு விளம்பரங்களும் முக்கிய காரணமாக இருக்கின்றன.
இந்நிலையில் ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் தற்போது புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன்படி ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் விதிமீறல் இருந்தால் ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய (RERA) விதிகளின்படி, விளம்பரங்கள் மற்றும் விற்பனையில் வெளிப்படைத் தன்மை அவசியம். இதற்காக பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.
ரியல் எஸ்டேட் விளம்பரத்தில் தவறான தகவல்களை வெளியிடுதல், பதிவு எண் இல்லாமல் விளம்பரம் செய்தல், வீடுகள் மற்றும் நிலங்கள் பற்றிய தவறான வாக்குறுதிகளை அளித்தல் போன்ற விதிமீறல்களுக்கு, திட்டத்தின் மொத்த மதிப்பில் சுமார் 5% வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புண்டு.
இந்நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு இந்த அபராதத் தொகையை உறுதிபடுத்தியுள்ளது. அனுமதி பெறாத மற்றும் தகுதியற்ற வீட்டு மனைகளை விற்பனை செய்வது, பொதுமக்களை ஏமாற்றும் வகையில் உண்மைக்குப் புறம்பான வாக்குறுதிகளை அளிப்பது சட்டப்படி குற்றமாகும். இதுகுறித்த புகார்கள் தமிழக அரசுக்கு அதிகளவில் வந்தமையால், தற்போது கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வீட்டு மனை திட்ட விளம்பரத்தில் சந்தை விலை மற்றும் பிற வீட்டு மனைகளின் விலையோடு ஒப்பிட்டு விளம்பரம் செய்யக் கூடாது. மீறினால் வீட்டு மனைத் திட்டத்திற்கு ஏற்ப ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இதன்மூலம் பொதுமக்கள் ஏமாற்றப்படுவது தடுக்கப்படுவதோடு, ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்படைத் தன்மை நிலவும்.
பொதுமக்கள் கவனத்திற்கு:
* பொதுமக்கள் ரியல் எஸ்டேட் விளம்பரங்களை அப்படியே நம்பாமல் அதில் உள்ள தகவல்கள் உண்மையானதா என்பதை சரி பார்க்க வேண்டும்.
* விளம்பரத்தில் காட்டப்படும் வீட்டுமனையின் பதிவு எண்ணை, RERA-வின் அதிகாரபூர்வ இணையதளத்தில் சரி பார்க்க வேண்டியது அவசியம்.
* விளம்பரத்தில் காட்டப்படும் வீட்டுமனை திட்டமானது, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் DTCP அனுமதி பெற்றதா என்பதை சரி பார்க்க வேண்டும்.
* சந்தேகிக்கும் படியான ரியல் எஸ்டேட் விளம்பரங்களை பொதுமக்கள் கண்டால், உடனடியாக ஆன்லைனிலோ அல்லது தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் அலுவலகத்திற்கு நேரில் சென்றோ புகார் அளிக்கலாம்.