

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் யுபிஐ பணப் பரிமாற்றத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆன்லைனில் பணப் பரிமாற்றம் செய்வது அதிகரித்தது போலவே, ஆன்லைன் பண மோசடிகளும் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் உங்கள் வங்கிக் கணக்கிற்கு யாரேனும் NEFT Transaction அல்லது யுபிஐ மூலம் தவறுதலாக பணத்தை அனுப்பி விட்டால், அடுத்து நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனமுடன் இருக்க வேண்டும். ஏனென்றால் ஆன்லைனில் பண மோசடிகள் அதிகரித்து வருவதால், இதுவும் ஒரு மோசடியாக இருக்க வாய்ப்புள்ளது.
இந்த நேர்த்தில் யாரேனும் உங்களைத் தொடர்பு கொண்டு, பணத்தை தவறுதலாக மாற்றி உங்களுக்கு அனுப்பி விட்டேன்; திருப்பி அனுப்பி விடுங்கள் எனக் கேட்டால், உடனே பணத்தை அனுப்ப வேண்டாம்.
அந்த நபர் சொல்வது உண்மை தானா அல்லது இது ஆன்லைன் மோசடியா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இரண்டில் எதுவாக இருந்தாலும், நீஙகள் பணத்தை நேரடியாக திருப்பி அனுப்பக் கூடாது என்பதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்
உங்கள் வங்கிக் கணக்கிற்கு வந்த பணத்தை செலவு செய்யாமல் அப்படியே வைத்திருங்கள். பணத்தைத் திரும்ப கேட்கும் நபர் மீண்டும் உங்களைத் தொடர்பு கொண்டால் அவருடைய கணக்கு இருக்கும் வங்கிக் கிளைக்குச் சென்று பணத்தை வேறொருவருக்கு மாற்றி அனுப்பி விட்டேன்; மீட்டுத் தாருங்கள் என எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க சொல்லுங்கள்.
சம்பந்தப்பட்ட வங்கி, உங்களுக்கு கணக்கு இருக்கும் வங்கிக் கிளையைத் தொடர்பு கொண்டு உங்களின் அனுமதியை கேட்கும். அப்போது நீங்கள் அனுமதி கொடுத்து விட்டால், அந்த பணம் அவருடைய வங்கிக் கணக்கிற்கு மாற்றம் செய்யப்படும்.
இணைய வழி மோசடிகள் அதிகரித்து வரும் இன்றைய சூழலில் யாரோ ஒருவரின் வங்கிக் கணக்கை ஹேக் செய்து, அந்த பணத்தை உங்கள் வங்கி கணக்கில் செலுத்துவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது.
இப்படியான சூழலில் நீங்கள் இந்த பணத்தை நேரடியாக திருப்பி அனுப்பினால் சைபர் கிரைம் விசாரணையில் முதல் குற்றவாளியாக நீங்களே இருப்பீர்கள்.
ஆகையால் எதுவாக இருந்தாலும் நீங்கள் நேரடியாக பணத்தை அனுப்ப வேண்டாம். வங்கிக் கிளை மூலமாகவே பணத்தை சம்பந்தப்பட்டவருக்கு அனுப்புவது தான் சிறந்தது.
ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் காலகட்டத்தில், நாம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது தானே.!