நாளை வானில் தோன்றும் அதிசய இரத்த நிலவு!

Blood Moon
Blood Moon
Updated on

இந்த வருடத்தின் முதல் சந்திர கிரகணம் நாளை மார்ச் 14 ஆம் தேதி வானில் நிகழ உள்ளது. இந்த கிரகணத்தின் போது  சந்திரன் மெதுவாக படிப்படியாக அடர் சிவப்பு நிறமாக மாறும், இது முழு சந்திர கிரகணத்தின் காரணமாக நிகழும். அப்போது வானத்தில் இரத்தம் தோய்ந்த நிறத்தில் நிலவு காணப்படுவதால் இதை இரத்த நிலவு அல்லது பிளட் மூன் என்று அழைக்கின்றனர்.

சந்திர கிரகணம்: 

சூரியன் பூமி மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் சந்திரனை மறைக்கிறது. இதனால் சந்திரனை அடைய வேண்டிய சூரிய ஒளி தடுக்கப்படுகிறது. இந்த நிகழ்வே சந்திர கிரகணம் எனப்படுகிறது. பூமியின் நிழலின் இருண்ட பகுதிக்குள் சந்திரன் முழுமையாகச் செல்லும்போது முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது.இதன் காரணமாக சிறிது நேரம் வானம் முற்றிலும் இருட்டாகத் தோன்றும். ஆனால் அது முற்றிலும் கருப்பாக இருப்பதில்லை. மாறாக சந்திரன் சிவப்பு நிறத்தில் வானத்தில் தோன்றுகிறது.

இரத்த நிலவு: 

பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வருவதால் அது சூரிய ஒளியை சந்திரன் மீது படாமல் தடுக்கிறது. ஆனால், பூமியின் வளிமண்டலம் சூரிய ஒளியை சிதறடித்து சந்திரனுக்கு கடத்துகிறது. இந்த நேரத்தில், வளிமண்டலம் நீல ஒளியைச் சிதறடித்து, சிவப்பு மற்றும் ஆரஞ்சு ஒளியை மட்டுமே கடந்தி செல்ல அனுமதிக்கிறது. இதனால் தான் சந்திரன் இரத்த சிவப்பு நிறத்தில் தோன்றுகிறது. இந்த நேரத்தில் வளிமண்டலத்தில் அதிக தூசி, புகை அல்லது எரிமலைத் துகள்கள் இருந்தால், சந்திரன் இன்னும் அடர் சிவப்பு அல்லது செம்பு நிறத்தில் தோன்றும்.

நாளை இரவு வானத்தில் சிறிது ஈரப்பதம் இருந்தால், வானவில்லை போன்ற நிலவு வில் தோன்றுவதை காண முடியும். இது சூரிய ஒளிக்கு பதிலாக நிலவொளியால்  உருவாக்கப்பட்ட வானியல் நிகழ்வாக இருக்கும். சந்திரன் பூமியின் நிழலில் இருக்கும்போது அதன் பெரும்பகுதி இருளில் மூழ்குவதால் நட்சத்திரங்களையும் மற்ற கோள்களையும் தெளிவாக காண சிறப்பான தருணமாக இருக்கும். மேற்கு திசையில் வியாழன் மற்றும் செவ்வாய் கிரகங்கள் ஒளி வீசுவதை காணலாம். மேலும், பல விண்மீன் கூட்டங்களும் தென்படலாம்.

இந்த முழு சந்திர கிரகணம் குறிப்பாக மேற்கு அரைக்கோள நாடுகளில் மட்டுமே கண்டுகளிக்க முடியும். அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, ரஷ்யா, ஜப்பான் மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் தெளிவாகத் தெரியும். இது இந்தியாவில் முழுமையாகத் தெரியாது. இந்தியாவில் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி அதிகாலையில் தோன்றும் சந்திர கிரகணத்தை கண்டுகளிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
ஓர் அதிர்ச்சித் தகவல் - பூமியை விட்டு விலகும் நிலா! இனி ஒரு நாளைக்கு 25 மணி நேரமாம்!
Blood Moon
logo
Kalki Online
kalkionline.com