

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெறுவதில், மிக முக்கியமான புதிய நடைமுறை அமலுக்கு வரவுள்ளதாக மத்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம் 2026-இன் புதிய விதிகள் வரும் அக்டோபர் 1-ம்தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரவுள்ளன. அதன்படி, இனி வரும் காலங்களில் தாமதமாகப் பிறப்பு அல்லது இறப்பைப் பதிவு செய்வது மிகவும் கடினமான ஒரு நடைமுறையாக மாறப்போகிறது.
தாமதமாகப் பிறப்பு அல்லது இறப்பைப்பதிவு செய்பவர்களைக் கட்டுப்படுத்தவும், சரியான நேரத்தில் பதிவுகளை ஊக்குவிக்கவும் மத்திய அரசு இந்த சட்டத்தைக் கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்ற இந்த புதிய சட்டத் திருத்தம், அடுத்த மாதம் முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருவதாக இந்தியப் பதிவாளர் ஜெனரல் மிருத்யுஞ்சய் குமார் நாராயண் அறிவித்துள்ளார்.
பிறந்து அல்லது இறந்து 21 நாட்களுக்குள் உள்ளாட்சிகளில் விண்ணப்பித்து பிறப்பு, இறப்பு சான்றுகளை பெற முடியும். பொதுவாக, ஒரு குழந்தை பிறந்தாலோ அல்லது யாராவது இறந்துவிட்டாலோ அதனை குறிப்பிட்ட நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அரசுத் துறையிடம் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாகும். பள்ளியில் சேர்ப்பது, ஆதார் கார்டு வாங்குவது, நில புலன்களை பெறுவது, வாரிசு சான்று வாங்குவது என பிறப்பு, இறப்பு சான்றுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஆனால், பல்வேறு காரணங்களால் பலர் இதைத் தாமதமாகப் பதிவு செய்கின்றனர். புதிய சட்டத்தின்படி, இனி ஒரு வருடம் முதல் இரண்டு வருடங்கள் வரை தாமதமாகப் பதிவு செய்தால், மாவட்ட ஆட்சியர் அல்லது வருவாய் கோட்டாட்சியர் போன்ற அதிகாரிகளின் முறையான அனுமதி கட்டாயம் தேவைப்படும்.
21 நாட்கள் கழித்தும் விண்ணப்பிக்காதவர்கள் ஓராண்டு வரை தாசில்தாரிடம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
அதேசமயம், ஓராண்டுக்கு மேல் விண்ணப்பிக்காதவர்கள் மாவட்ட ஆட்சியர் அல்லது வருவாய் கோட்டாட்சியர் போன்ற அதிகாரிகளிடம் விண்ணப்பிக்க வேண்டிய நிலை முன்பிருந்தது. அவர்கள் அதற்கு உரிய கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு, முழுமையாக விசாரித்த பின்னரே சான்றிதழ்களை வழங்குவார்கள். அதுவே இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பதிவு செய்ய விரும்புவோர், முதல் வகுப்பு நீதித்துறை நடுவரிடம்(Judicial Magistrate First Class), அதாவது நீதிமன்றத்தில் முறையான உத்தரவைப் பெற்றால் மட்டுமே சான்றிதழைப் பெற முடியும்.
அதேசமயம், பிறப்பு அல்லது இறப்பு நிகழ்ந்து 1 வருடத்திற்குப் பிறகு, ஆனால் 2 வருடங்களுக்குள் பதிவு செய்ய வேண்டுமானால், மாவட்ட மேஜிஸ்ட்ரேட் (DM), துணைப் பிரிவு மேஜிஸ்ட்ரேட் (SDM) அல்லது அங்கீகரிக்கப்பட்ட செயல்முறை மேஜிஸ்ட்ரேட் (Executive Magistrate) அனுமதியும், குறிப்பிட்ட அபராதக் கட்டணமும் செலுத்தவேண்டியிருக்கும்.
1961-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பிறப்பு இறப்பு பதிவுச் சட்டத்தில், கடந்த ஆண்டு சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்ட நிலையில், தற்போது இந்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஒரு தனி மனிதனின் சட்டப்பூர்வமான அடையாளத்தை உறுதி செய்வதிலும், அரசின் பலன்களைப் பெறுவதிலும் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இதனடிப்படையில் ஓராண்டு முதல் 2 ஆண்டுகள் வரையிலான பிறப்பு, இறப்பு சான்றுகளை மாவட்ட ஆட்சியர் அல்லது வருவாய் கோட்டாட்சியர் வழங்கவும், 2 ஆண்டுகளுக்கு மேலான விண்ணப்பங்களை மாவட்டங்களில் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களில் பெற்றுக் கொள்ளும் சட்டம் தற்போது லோக்சபாவில் இயற்றப்பட்டுள்ளதால் இனிமேல் பொதுமக்கள் வருவாய்த்துறைக்கு அலைய வேண்டிய அவசியம் இல்லை.
நேரடியாக விண்ணப்பங்களை நீதிமன்றங்களில் தாக்கல் செய்து பெற்றுக் கொள்ளலாம். இதனால் விண்ணப்பித்து காலதாமதம் ஏற்பட்டு வரும் விண்ணப்பதாரர்கள் நிம்மதி அடைந்துள்னர்.
இதை மத்திய அரசும் கெஜட்டில் வெளியிட்டுள்ளதால் இந்த புதிய நடைமுறை வரும் அக்டோபர் 1-ம்தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரவுள்ளன.
எனவே, மக்கள் இனி காலதாமதம் செய்யாமல் சரியான நேரத்தில் தங்களது பதிவுகளை மேற்கொள்வதை ஊக்குவிக்கவும், போலியான பதிவுகளை முற்றிலுமாகத் தடுக்கவும் இந்த புதிய சட்டம் பேருதவியாக இருக்கும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.