

தமிழகத்தின் தலைநகர் சென்னை நகர வளர்ச்சியுடன் முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், ஒலி மாசு கவலைக்கிடமான அளவில் உயர்ந்து வருகிறது. சமீபத்தில், சென்னை மாநகரில் பல பகுதிகளில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்த அளவை விட ஒலி மாசுபாடு அதிகளவு உள்ளது என சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஒலி மாசுபாடு (Noise Pollution) என்பது மனிதர்கள் மற்றும் விலங்குகளின் செயல்பாட்டிற்குத் தீங்கு விளைவிக்கும் வகையில், போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல், இயந்திரங்கள், சிசிடிவி கண்காணிப்பு, ஒலி அளவீட்டு கருவிகள் மூலம் கண்காணிப்பு, மற்றும் தொழிற்சாலைகளால் ஏற்படும் தேவையற்ற, அதிகப்படியான சத்தம் ஆகும். குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்து மற்றும் கட்டுமானப் பணிகளால் ஒலி மாசு ஆபத்தான அளவை எட்டியுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் 8 மாதங்களாக சென்சார்கள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் குறிப்பாக அம்பத்தூர் மற்றும் வளசரவாக்கம் போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதால், அனுமதிக்கப்பட்ட அளவை விட ஒலி மாசு (Noise Pollution) கவலைக்கிடமாக உயர்ந்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
IIT மெட்ராஸ் மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட தரவுகளின்படி, நகரின் முக்கிய சாலைகள் மற்றும் வர்த்தக மையங்கள் அருகே சத்தம் தேசிய தரநிலைகளை மீறுகிறது. குடியிருப்பு பகுதிகளில் பகலில் 65 டெசிபல்(dB) மற்றும் இரவில் 50 டெசிபல் என்ற வரம்புகள் இருந்தாலும் அவை தொடர்ந்து மீறப்படுகின்றன.
நகரின் பிஸியான சாலைகள், பேருந்து நிலையங்கள், சந்திப்புகள், தொழிற்சாலை வளாகங்கள் அருகே வாகன ஹாரன்களின் அதிகப்படியான பயன்பாடு, கனரக வாகன சத்தம், சிக்னல் தாமதம், மாற்றமடைந்த சாலைத்தள அமைப்பு போன்றவை ஒலி மாசுபாடு அதிகரிப்பதற்கு முதன்மை காரணங்களாகக் கூறப்படுகின்றன.
தொடர்ந்து அதிகரிக்கும் ஒலி மாசுபாட்டால் பொதுமக்களிடையே குறிப்பாக வயதானவர்களுக்கு தூக்கமின்மை, இரத்த அழுத்தம் உயர்வு, காது கேளாமை மற்றும் மன அழுத்தம் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குடியிருப்பு, பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற பகுதிகளின் அருகே கூட ஒலி அளவு கட்டுப்பாட்டை மீறுவது கவலை அளிப்பதாக இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஒலி மாசுபாடு என்பது கண்களுக்குத் தெரியாத ஒரு மெதுவான நஞ்சு. இதைத் தடுக்கத் தவறினால், எதிர்காலத் தலைமுறையினரின் கேட்கும் திறன் பெருமளவில் பாதிக்கப்படக்கூடும்.
மேலும் வளர்ச்சி என்பது வெறும் கட்டடங்களிலும் சாலைகளிலும் மட்டும் இல்லை, மக்களின் அமைதியான வாழ்வியலிலும் இருக்கிறது என்பதை இந்தத் தரவுகள் நமக்கு உணர்த்துகின்றன.
இந்த நிலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சென்னை மாநகர காவல்துறை தேவையற்ற ஹாரன் ஒலிப்பை தவிர்க்க சிசிடிவி கண்காணிப்பு, ஒலி அளவீட்டு கருவிகள், விழிப்புணர்வு இயக்கங்கள் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், நகர வளர்ச்சித் திட்டங்களில் ஒலி தடுப்பு சுவர்கள் அமைத்தல், பசுமை வளங்களை அதிகரித்தல், மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவித்தல் மற்றும் பொதுப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் போன்ற நீண்டகால தீர்வுகளை அரசு முன்னெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் சென்னை மாநகர வளர்ச்சியுடன் இணைந்து ஒலி மாசை கட்டுப்படுத்தும் திட்டங்கள் அரசு தீவிரமாக செயல்படுத்தப்படாவிட்டால், எதிர்காலத்தில் சென்னை மக்களின் வாழ்க்கைத் தரம் மேலும் பாதிக்கப்படக்கூடும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.