
உலகம் முழுவதும் உள்ள 140 கத்தோலிக்கர்களின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த மாதம் 21-ந் தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது உடல் 26-ந் தேதி ரோமில் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் 9 நாட்கள் வாடிகனில் துக்கம் அனுசரிக்கப்பட்டது. இந்த நடைமுறைகளுக்குப்பின் புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இதனை தொடர்ந்து புதிய போப் ஆண்டவர் தேர்வு எப்போது என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் எழுந்தது. குறிப்பாக, போப் என்பவர் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் ஆன்மிக தலைவர் மட்டுமின்றி உலகின் சிறிய நாடான வாடிகனின் ஆட்சித்தலைவரும் என்பதால் புதிய போப் யார் என்பதை அறிய அகில உலகமும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறது.
ஒரு போப் மரணம் அடைந்தாலோ அல்லது பதவி விலகினாலோ புதிய போப்பை தேர்வு செய்வதற்கு கத்தோலிக்க திருச்சபையில் நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான கார்டினல் கான்கிளேவ் எனப்படும் கர்தினால் மாநாடு தொடங்கியது. புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யப்படும் வரை அவர்கள் அங்கேயே தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இதற்காக அவர்களது செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டும், அவர்களை எந்தவிதத்திலும் தொடர்பு கொள்ளாமல் இருப்பதற்காக ஜாமர் கருவிகள் கொண்டு சிற்றாலயத்தை சுற்றி தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டு உள்ளன.
வாடிகனில் உள்ள சிஸ்டைன் சிற்றாலயத்தில் நடந்த இந்த நிகழ்வில் புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கு தகுதி வாய்ந்த 80 வயதுக்கு உட்பட்ட 133 கார்டினல்கள் கூடினர். உலகம் முழுவதும் 252 கர்தினால்கள் உள்ள நிலையில், போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான வாக்களிக்கும் தகுதி உடையவர்கள் 135 கர்தினால்கள் ஆவர். இதற்காக கடந்த 7-ம்தேதி முதல் வாக்கெடுப்பு நடந்து வந்தது.
இதில் 3-ல் 2 பங்கு ஆதரவு அதாவது 89 வாக்குகள் யாரும் பெறாததால் புதிய போப் தேர்வாகவில்லை. இதை புகை போக்கி வழியாக கரும்புகை வெளியிட்டு உலகுக்கு அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நடந்த 2 வாக்களிப்பிலும் ஏமாற்றமே மிஞ்சியது.
2 முறை நடந்த வாக்கெடுப்பிலும் தோல்வி ஏற்பட்ட நிலையில் கடைசியான நேற்று மாலை புதிய போப் ஆண்டவர் தேர்வானதை சிஸ்டைன் சிற்றாலய புகைபோக்கியில் வெண்புகையை வெளியிட்டு உலகுக்கு தெரியப்படுத்தப்பட்டது.
அப்போது வாடிகன் புனித பீட்டர் சதுக்கத்தில் கூடியிருந்த லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் கைகளை தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பின்னர் சிறிது நேரத்தில் புனித பீட்டர் பேராலய பால்கனியில் தோன்றிய கார்டினல்கள் புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யப்பட்டதை (ஹேபிமுஸ் பாப்பம்) அறிவித்தனர்.
அமெரிக்காவை சேர்ந்த கார்டினல் ராபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் கத்தோலிக்கர்களின் 267-வது போப் ஆண்டவராக தேர்வு செய்யப்பட்டார் என்பதையும், அவர் போப் 14-ம் லியோ என அழைக்கப்படுவார் என்றும் அறிவித்தார். அதனை தொடர்ந்து புதியதாக பதவியேற்ற போப் ஆண்டவர் 14-ம் லியோ பால்கனியில் தோன்றி அங்கே கூடியிருந்த மக்களுக்கு ஆசி வழங்கினார்.