வாகன ஓட்டிகளே உஷார்..!!சொந்த வாகனத்தில் பயணிகளை ஏற்றினால் ரூ.25,000 அபராதம்..!
தனிப்பட்ட பயன்பாட்டிற்கு வாங்கப்படும் சொந்த வாகனங்களில், பயணிகளை ஏற்றினால் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை தற்போது அறிவித்துள்ளது.
இன்னும் இரண்டு நாட்களில் தீபாவளி பண்டிகை வர இருப்பதால், ரயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு செய்து பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர். இந்நிலையில் முன்பதிவு டிக்கெட்டுகள் கிடைக்காத பயணிகள் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டிய சூழலில் உள்ளனர்.
ஆம்னி பேருந்துகளிலும் இடம் கிடைக்காதவர்கள், கார் உள்ளிட்ட வாகனங்களில் பயணிக்க ஆயத்தமாக உள்ளனர். இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, ஒருசிலர் சொந்த வாகனங்களை வாடகைக்கு விடுகின்றனர். இது சட்டத்திற்கு புறம்பான செயல் என்பதால், இனி சொந்த வாகனங்களில் பயணிகளை ஏற்றக்கூடாது என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதனை மீறினால் ரூ.25,000 அபராதம் செலுத்த நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக மஞ்சள் நிற நம்பர் பிளேட் கொண்ட கார் உள்ளிட்ட வாகனங்களில் மட்டுமே பயணிகளை ஏற்ற வேண்டும். தனிப்பட்ட சொந்த பயன்பாட்டிற்கு வாங்கப்படும் வாகனங்களுக்கு வெள்ளை நிற நம்பர் பிளேட் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் சொந்த வாகனங்களை சிலர் சட்டத்திற்கு புறம்பாக வாடகைக்கு விடுவது, கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. இதனைத் தடுக்கும் நோக்கத்தில் தற்போது ரூ.25,000 அபராதம் விதித்து போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. அதேபோல் பயணிகளும் வெள்ளை நிற நம்பர் பிளேட் கொண்ட கார் உள்ளிட்ட வாகனங்களில் பயணிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சொந்த வாகனங்களை சிலர் பணத்திற்காக வாடகைக்கு விடுகிறார்கள் என தமிழக போக்குவரத்து துறைக்கு அதிகளவில் புகார்கள் வந்தன. இதனைத் தடுக்கவும், சட்டததிற்கு விரோதமான செயல்கள் ஏதேனும் நடக்காமல் இருக்கவும் அதிரடியான முடிவை எடுத்துள்ளது போக்குவரத்து துறை.
இந்நிலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் அவ்வப்போது வாகனச் சோதனையில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சொந்த வாகனங்களில் பயணிகளை ஏற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, ரூ.25,000 அபராதமும் விதிக்கப்படும்.
வெள்ளை நிற நம்பர் பிளேட் கொண்ட கார்களில் பயணிகள் பயணிக்கும் போது, ஒருவேளை வாகனம் விபத்துக்குள்ளானால், அவர்களுக்கு காப்பீடு உள்ளிட்ட எந்தச் சலுகையும் கிடைக்காது. இதனை பயணிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
ஏற்கனவே ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரித்திருந்தது. இந்நிலையில் சொந்த வாகனங்களை வாடகைக்கு விடுவதை தடுக்கவும் போக்குவரத்து துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவது பாராட்டத்தக்கது.