

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 'கிரீமி லேயர்' (ஓபிசி பிரிவினரில் சமூக, கல்வி, பொருளாதார ரீதியாக முன்னேறியவர்களைக் குறிக்கும் சொல். இவர்கள் இடஒதுக்கீடு சலுகைகளைப் பெற தகுதியற்றவர்களாகக் கருதப்படுவர்) தகுதியை பெற்றோரின் வருமானத்தை மட்டும் கொண்டு தீர்மானிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிஎஸ் நரசிம்மா மற்றும் நீதிபதி ஆர் மகாதேவன் அமர்வு அந்த தீர்ப்பை அளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற OPC பிரிவினருக்கு பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது.
சம்பள வருமானத்தை வணிகம் அல்லது சொத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்துக்குச் சமமாகக் கருத முடியாது. இதன் மூலம் உண்மையான OPC பிரிவினர் இட ஒதுக்கீட்டிலிருந்து தவறான முறையில் வெளியேற்றப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படுகின்றனர். பல்வேறு வேலைவாய்ப்புத் துறைகளில் பாரபட்சமான பாகுபாட்டை நிராகரிக்கிறது.
இதுதொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களை நிராகரித்த உச்சநீதிமன்றம், தொழில் நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்துடன் சம்பள வருமானத்தை ஒப்பிடகூடாது எனக்கூறியது. கிரீமிலேயர் பிரிவில் அவர்கள் தவறுதலாக சேர்க்கப்பட்டதாக கூறி பணி நியமனம் மறுக்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றம் இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்துள்ளது.
UPSC நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் மாணவர்கள் பலர் OPC பிரிவினருக்கான கிரீமிலேயர் அல்லாத பிரிவில் இடஒதுக்கீடு கேட்டனர், ஆனால் அவர்களின் பெற்றோர் பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் உள்ளவற்றில் பணியாற்றுகின்றனர். அவர்களின் சம்பளத்தை வைத்து அவர்கள் கிரிமி லேயர் பிரிவில் வருவார்கள் என UPSC அறிவித்தது
பெற்றோரின் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு, கிரீமிலேயர் எனக் குறிப்பிடப்பட்டதால் OPC பிரிவிலிருந்து தங்களை நீக்கியதை எதிர்த்து பல சிவில் சர்வீஸ் தேர்வர்கள் மத்திய தீர்ப்பாயம், சென்னை, டெல்லி, கேரளா உயர்நீதிமன்றங்களை நாடினர். இதனை விசாரித்த நீதிமன்றங்கள், அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது.
ஆனால் மத்திய தீர்ப்பாயம், டெல்லி, சென்னை, கேரள உயர்நீதிமன்றங்கள் இந்த மனுவை ஏற்றுக்கொண்டதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், OPC பிரிவினருக்கு ஆதரவாக உயர்நீதிமன்றங்கள் தந்த தீர்ப்புகளை உறுதி செய்து இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
OPC - கிரீமிலேயர் என்பதை அறிமுகப்படுத்திய மண்டல் கமிஷன் தொடர்பான இந்திரா சாஹானியுன் தீர்ப்பில் எடுத்துரைக்கப்பட்ட அரசியலமைப்பு நோக்கத்தை தோற்கடிக்கும் விதமாக சம்பள வருமானத்தை இயந்திரத்தனமாக சேர்த்து கணக்கிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. மேலும் இத்தீர்ப்பின்படி, 'கிரீமிலேயர்' தகுதியை மறுபரிசீலனை செய்து 6 மாதங்களுக்குள் முடிவு எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைத்த ஒரு நிச்சயமான வெற்றி. OBC பிரிவினருக்கான 'கிரீமி லேயர்' அல்லாதோர் தகுதியைத் தீர்மானிப்பது குறித்து, உச்சநீதிமன்றம் அளித்துள்ள தெளிவானத் தீர்ப்பை வரவேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.