

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். என்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதில், இறந்து போன வாக்காளர்கள், நிரந்தரமாக இடம் மாறிய வாக்காளர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் சேர்த்திருந்த வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டன. இந்த திருத்தங்களை மேற்கொண்ட பிறகு கடந்த டிசம்பர் 19-ந் தேதி வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 97 லட்சத்து 37 ஆயிரத்து 832 பெயர்கள் நீக்கப்பட்டு, 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 வாக்காளர்கள் மட்டும் இடம் பெற்றிருந்தனர்.
அதைத்தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணி தொடங்கிய நிலையில் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள், பெயர் நீக்கப்பட்டவர்கள், 1.1.2026 அன்று 18 வயதை பூர்த்தி செய்யும் புதிய வாக்காளர்கள் போன்றோர் தங்களின் பெயரை சேர்க்க வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி பெயர் நீக்கம், முகவரி திருத்தம் ஆகியவற்றுக்காக கடந்த டிசம்பர் 27, 28 மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்களை இந்திய தேர்தல் கமிஷன் நடத்தியது.
இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 15.22 லட்சம் பேரும், பெயரை நீக்க 71,222 பேரும் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். ஆனால் நிரந்தரமாக இடம் மாறிச் சென்ற 66 லட்சம் வாக்காளர்களில் நிறைய பேர், பெயர் சேர்ப்புக்காக விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் 15.22 லட்சம் பேர் மட்டுமே இதுவரை விண்ணப்பித்துள்ளனர். மீதமுள்ள சுமார் 53 லட்சம் பேர் ஏன் பெயர் சேர்ப்புக்கு விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசத்தை வரும் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் தகுதியுள்ள குடிமக்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக வருகிற 24-ந்தேதி(சனிக்கிழமை), 25-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம்கள் நடைபெற உள்ளது.
முகாம்களில் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத நபர்கள் மற்றும் 18 வயது நிரம்பிய தகுதியுள்ள நபர்கள் படிவம் 6-ஐ உறுதிமொழி படிவத்துடன் சமர்ப்பித்து தங்களது பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
மேலும், ஒரு சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள எந்தவொரு வாக்காளரும் முன்மொழியப்பட்ட சேர்க்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்கவோ அல்லது ஏற்கனவே உள்ள பெயரை நீக்கவோ படிவம் - 7 மூலம் விண்ணப்பிக்கலாம்.
முகவரி மாற்றுதல், திருத்தம் செய்தல், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றம் செய்ய, மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என குறிப்பது ஆகிய கோரிக்கை உடையவர்கள் படிவம் 8-ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
பொதுமக்கள் அனைவரும், இந்த நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்தை பயன்படுத்தி, வாக்காளர் பட்டியல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு இறுதி வாக்காளர் பட்டியல், ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தேதியில் அதாவது, பிப்ரவரி 17-ம்தேதி வெளியிடப்படும் என்று என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.