

சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இன்று நடந்த அடுத்தடுத்த பட்டாசு ஆலை வெடி விபத்துகளில் இரண்டு தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். பட்டாசு மருந்து கலவைகளை கையாளும் போது ஏற்பட்ட இந்த விபத்தினால் அப்பகுதி மக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெடி விபத்தின் தீவிரம் காரணமாக வான் உயரத்திற்கு கரும்புகை சூழ்ந்து அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிவகாசி அருகே வடிவேல் பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி உடல் சிதறி தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதியில் சிவகாசி அருகே உள்ள அனுப்பன்குளத்தில் வடிவேல் பட்டாசு ஆலையில் மருந்துக் கலவை செய்யும் பொழுது இந்த பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மானகசேரியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். கட்டிட இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கி இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மானகசேரியில் சந்தான பாண்டி என்பவருக்கு சொந்தமான ஹரிஷ்மா பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை திடீரென்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து காரணமாக பட்டாசு தயாரிக்கும் இரண்டு அறைகள் தரைமட்டம் ஆகி உள்ளன. வெடிவிபத்தில் அங்கு வேலை பார்த்து வந்த காளிராஜன் என்பவர் பயங்கர தீக்காயத்துடன் தற்போது சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி மேலும் ஒரு தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பட்டாசுகள் மற்றும் வேதிப்பொருட்கள் தொடர்ச்சியாக வெடித்து சிதறியதால், வான் உயரத்திற்கு கரும்புகை எழுந்து அப்பகுதி முழுவதும் பரவியது. இந்த வெடிச்சத்தம் பல கிலோமீட்டர் தூரத்திற்கு கேட்டதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதுடன் இடிபாடுகளுக்கு இடையே யாரேனும் சிக்கி இருக்கிறார்களா எனத் தேடும் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையினரும், அதிகாரிகளும் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டே இருந்ததால் சம்பவ இடத்திற்குள் உடனடியாகச் சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் தொடக்கத்தில் சிறிது தொய்வு ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து உள்ளூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மானகசேரியில் உள்ள ஹரிஷ்மா பட்டாசு ஆலை மற்றும் சிவகாசி அருகே அனுப்பன்குளத்தில் வடிவேல் பட்டாசு ஆலை என இரு வெவ்வேறு பட்டாசு ஆலைகளில் நேர்ந்த பட்டாசு விபத்துகளில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.