

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-1 இன்று (ஜூலை 18-ம்தேதி) சனிக்கிழமை விண்ணில் ஏவப்படுகிறது.
தெலுங்கானா மாநிலம் தலைநர் ஐதராபாத்தை சேர்ந்த ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ (Skyroot Aerospace) என்ற தனியார் நிறுவனம் ஆர்பிட்டல் ராக்கெட் (Orbital Rocket) 'விக்ரம் 1' (Vikram-1) என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளது. இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று (ஜூலை 18-ம்தேதி) காலை 11.30 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான கவுண்டவுன் நேற்று தொடங்கியது.
'மிஷன் ஆகமன்' (Mission Aagaman) என்கிற பெயரில் இந்த ராக்கெட்டை ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் விண்ணிற்கு அனுப்ப உள்ளது. இந்தியாவில் இருந்து இந்தியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் விண்ணுக்கு அனுப்பும் முதல் ஆர்பிட்டல் வகை ராக்கெட் இதுவாகும். 'வருகை' என்ற பொருள்படும் 'ஆகமன்' (Aagaman) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம், இந்தியாவின் தனியார் விண்வெளித் துறைக்கு ஒரு மைல்கல்லாகும்
மேலும், அரசால் உருவாக்கப்பட்ட ராக்கெட் அல்லது ஏவுகளத்தைச் சாராமல், இந்திய தனியார் நிறுவனம், தான் சொந்தமாக உருவாக்கிய ஏவுகளத்தைப் பயன்படுத்தி செயற்கைக்கோளை விண்வெளி சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த முயற்சிப்பது இதுவே முதல் முறையாகும்.
கிரஹா ஸ்பேஸ் (Grahaa Space), காஸ்மோ சர்வ் (Cosmoserve), டிகியூப்ட் (DCubed) மற்றும் கைரூட்டின் (Skyroot)‘ஸ்கோப் (SCOPE) உள்ளிட்ட நிறுவனங்களின் தொழில்நுட்ப சோதனை சுமைகளை (Payloads) விக்ரம்-1 சுமந்து செல்கிறது. மேலும், காஸ்மோஸ் டயமண்ட்ஸ் நிறுவனத்தின் நினைவு பரிசு பொருட்களும் இதில் பெற்றுள்ளன.
இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தையான டாக்டர் விக்ரம் சாராபாயின் நினைவாகப் பெயரிடப்பட்ட இந்த ஏவுகணை, ஏழு அடுக்கு மாடி உயரத்தைக் கொண்டது.
சுமார் 350 கிலோ வரை எடையை தாங்கும் வகையிலும், 60 டிகிரி சாய்வு கொண்டதாகவும், சிறிய செயற்கைக்கோள்களை குறைந்த புவி சுற்றுப்பாதையில் (Low Earth Orbit - LEO)நிலைநிறுத்தும் வகையிலும் விக்ரம்-1 வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இதில் முழுமையாக கார்பன் கலவை பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ள மூன்று கட்ட ராக்கெட்டில் 3-டி அச்சிப்பட்ட என்ஜின்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. முதல் சோதனை பயணத்தில் 450 கிலோமீட்டர் உயர சுற்றுப்பாதையை எட்டுவது இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
'மிஷன் ஆகமன்' குறித்து ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும் முதன்மைச் செயல் அதிகாரியுமான (CEO) பவன் குமார் சந்தனா கூறுகையில், ‘கடுமையான சோதனைகளுக்குப் பிறகு விக்ரம்-1 ஏவுதலுக்கு அனுமதி கிடைத்தது. விக்ரம்-1 ராக்கெட்டைத் தரையில் வைத்து சோதிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் செய்துள்ளோம்.
இது இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். முதல்முறையாக விமானப் பயணச் சூழலில் விக்ரம்-1 எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் காணவும் நாங்கள் ஆவலாக உள்ளோம். இது எங்களின் முதல் சோதனை திட்டம். இதன் மூலம் நாங்கள் மதிப்புமிக்க தரவுகளைப் பெறுவோம்.
இது தொடர்ச்சியாக ராக்கெட்டுகளை ஏவும் திட்டத்தை உருவாக்குவதற்கான ஸ்கைரூட்டின் லட்சியங்களுக்கு அடித்தளமாக அமையும்.
இதை வெற்றிகரமாகக் காண நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம்’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.