மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள மோதல் சூழலால் துபாயில் சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு நடிகர் சோனு சூட் இலவச தங்கும் விடுதிகளை அறிவித்துள்ளார்.
ஜாதி, மதம், தேசம் கடந்து மனிதாபிமான அடிப்படையில் இந்த உதவிகள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். சிக்கி தவிக்கும் பயணிகளுக்கு ஐக்கிய அரபு எமிரேட் ஆதரவுடன், துகாஸ்டா பிராபர்ட்டீஸ்('dugastaproperties') வழியாக துபாயில் இலவச தங்கும் இடத்தை அறிவித்தார். விமான ரத்து அல்லது வான்வழி மூடல்கள் காரணமாக பயணத்தைத் தொடர முடியாத எந்த ஒரு நாட்டினருக்கும் இந்த சலுகை பொருந்தும் என்று தெரிவித்துள்ளார். துகாஸ்டா ப்ராப்பர்ட்டீஸின் பிராண்ட் தூதராக பணியாற்றும் பாலிவுட் நடிகர் சோனு சூட் இந்த மனிதாபமான செயலை செய்துள்ளார்.
அமெரிக்கா-ஈரான் மோதலைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதட்டங்கள் அதிகரித்ததால், பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பல பயணிகள் துபாயில் சிக்கி தவித்து வீடு திரும்ப முடியாமல் தவித்தனர். தற்போது நடிகர் சோனு சூட் நெருக்கடியின் மத்தியில் சிக்கித் தவிப்பவர்களுக்கு இலவச தங்குமிட வசதியை அறிவித்துள்ளார். மேலும் தங்க இடம் தேவைப்பட்டால் பயணிகள் தன்னை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
வியாழக்கிழமை அன்று சோனு சூட் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ செய்தியை பகிர்ந்து கொண்டார். அதில் துபாயில் சிக்கி தவிக்கும் நமது சக இந்தியர்களாக இருந்தாலும் சரி அல்லது எந்த நாட்டினராக இருந்தாலும் சரி, தயவு செய்து துகாஸ்டா பிராப்பர்டிக்கு ஒரு டிஎம் அனுப்புங்கள் அல்லது எனக்கு அனுப்புங்கள். நீங்கள் உங்கள் நாட்டிற்கு திரும்பும் வரை இலவச தங்குமிட வசதியைப் பெறுவதை நாங்கள் உறுதி செய்வோம். ஜெய்ஹிந்த். கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக என்று சோனு கூறினார்.
கொரோனா காலத்திலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வீடு, உணவு, வாகன வசதிகளை செய்து கொடுத்த இவர், தற்போது மீண்டும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார்.