

தமிழ்நாட்டில் திமுக - அதிமுக என்ற வலுவான இரு துருவ அரசியல் களத்தில் மூன்றாவது துருவமாக உருவெடுத்து, எல்லோரையும் அதிரவைத்தார் விஜயகாந்த். 2006ம் ஆண்டுத் தேர்தலில் வலுவாக இருந்த திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளுக்கு எதிராகத் தனித்துப் போட்டியிட்டு தேமுதிக 8.38 சதவீத வாக்குகளைப் பெற்றது.
2006ம் ஆண்டு தேர்தலில், தேமுதிக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மட்டுமே வெற்றிபெற்றார் என்றாலும், ஒட்டுமொத்தமாக 27 லட்சத்து 64 ஆயிரம் வாக்குகளை அந்தக் கட்சி பெற்றது. இது தமிழக அரசியல் களத்தில் ஒரு மூன்றாவது சக்தியாக விஜயகாந்த் உருவெடுப்பதைச் சுட்டிக்காட்டியது.
சங்கரன்கோவில் தொகுதியில் 1952-ம் ஆண்டு நடந்த தேர்தல் முதல் பலர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். 1996, 2001, 2006, 2011 ஆகிய தேர்தல்களில் அதிமுக சார்பில் சொ.கருப்பசாமி வெற்றி பெற்று ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார்.
இவர் மறைந்து சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் வர இருந்த நேரம். 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேமுதிக போட்டியிட்டது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட தேமுதிக 29 எம்.எல்.ஏக்களைப் பெற்று, திமுகவை மூன்றாம் இடத்திற்குத் தள்ளி எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.
தேமுதிக தான் எதிர்க்கட்சியாக இருந்தது. எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த் இருந்தார். ஆரம்பத்தில், எல்லாம் சுமுகமாகவே சென்றுகொண்டிருந்தது. ஆனால், 2012-ம் ஆண்டு சட்டமன்றத்திலேயே முதலமைச்சர் ஜெயலலிதாவும் விஜயகாந்த்தும் கடுமையாக மோதிக்கொண்டனர். அதிமுகவோடு கூட்டணி அமைக்காமல் இருந்திருந்தால், இத்தனை இடங்களை தேமுதிக வென்றிருக்க முடியாது என்றும் கூறினார். தன்னை எதிர்த்துத் தனித்துப் போட்டியிடும்படி சவால் விடுத்தார் ஜெயலலிதா. அதனால் கூட்டணி முறிந்தது.
அதாவது சட்டப்பேரவையில் பால், மின்சார கட்டண உயர்வு குறித்து தேமுதிகவின் எம்எல்ஏக்கள் பிரச்சனையை எழுப்பினர். இதனால் அதிமுகவும் தேமுதிகவுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இதற்கு பதிலளித்த ஜெயலலிதா, இந்த கேள்விக்கு பலமுறை விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது என்று கூறினார். இருப்பினும் விடாப்பிடியாக, ‘உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே இதை செய்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை’ என்று சந்திரகுமார் கேள்வி எழுப்ப ஜெயலலிதா ஆவேசம் அடைந்தார்.
‘விலை ஏற்றத்திற்கு பின்னர் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வருகிறது. இந்த தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டு அமோக வெற்றி பெறும். உங்களுக்கு திராணி இருந்தால் தனித்து நின்று பாருங்கள்’ என்று ஆவேசமாக விஜயகாந்தை பார்த்து கூறினார்.
இதைதொடர்ந்த சங்கரன்கோவில் தொகுதிக்கான இடைத்தேர்தல் 2012 மார்ச் 18ந்தேதி நடந்தது. அந்தச் சவாலை ஏற்கும் விதமாக, சங்கரன்கோவிலில் தேமுதிக தனித்து போட்டியிட்டது. தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முத்துச்செல்வி 68,744 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட, இதர கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 12 பேரும் டெபாசிட் இழந்தனர்.
தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா, ‘சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தேமுதிகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர்’ என்றார்.