

தேர்வுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கின்ற நிலையில் பி.எட், எம்.எட். தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியாமல் மாணவர்கள் தவிக்கின்றனர்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பி.எட். (B.Ed.) மற்றும் எம்.எட். (M.E.D.) தேர்விற்கான ஹால் டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மாணவர்கள் ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்ய முயன்றபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது சாத்தியப்படவில்லை. இணையதளச் சேவையகம் (Server) மெதுவாக செயல்படுவதே இதற்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று நடைபெறவிருந்த குரூப் 2 தேர்வுகள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதும், அதன் விளைவாக பல இடங்களில் போராட்டம் நடைபெற்றதும் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தொழில்நுட்பக் கோளாறு தான் காரணம் என்றும், அதனால் தான் மையம் ஒதுக்குவதில் சிக்கல் உண்டானதாகவும் காரணம் கூறப்பட்டது. கடைசியில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் அவர்கள் மாற்றப்பட்டு புதிதாக வெங்கட பிரியா ஐஏஎஸ் அதிகாரி அவர்கள் நியமிக்கப்பட்டார்.
இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் புதிதாக அடுத்த சிக்கல் பி.எட், எம்.எட். மாணவர்களுக்கு எழுந்துள்ளது. 11ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை பி.எட், எம்.எட் படிப்புக்கான முதல் மற்றும் மூன்றாம் பருவத் தேர்வுகள் நடைபெற உள்ளன. ஆனால் இதுவரை சர்வர் சரியாகாததால் மாணவர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். இதனால் தேர்வுகள் முறையாக நடைபெறுமா என்ற சந்தேகம் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.