

அஸ்ஸாமின் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபொழுது மாயமான சுகோய்30 போர் விமானம் விபத்துக்கு உள்ளானது. வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக கூறப்படும் நிலையில் 2 விமானங்களைத் தேடும் பணி தீவிரம் தீவிரமடைந்தது.
அசாமின் ஜோர்ஹட் தளத்திலிருந்து கிளம்பிய விமானம் இரவு 7:42 மணி அளவில் ரேடார் தொடர்பை இழந்தது. இதனையடுத்து உடனடியாக இந்திய விமானப்படை அந்த விமானத்தை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டது. காணாமல் போன போர் விமானத்தை தேடும் பணி மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டது. பின்னர் விமானம் விபத்தில் சிக்கியது கண்டறியப்பட்டது.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானத்தில் 2 வீரர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களின் கதி என்ன என்பது குறித்து தெரியவில்லை என்றும், விமானம் காணாமல் போனது குறித்து விமானப்படைக் குழு ஆய்வு செய்து வருவதாகவும் பாதுகாப்புத் துறை தெரிவித்தது.
இது தொடர்பாக விமானப்படை தனது எக்ஸ் வலைதளத்தில், பயிற்சி பணியில் ஈடுபட்டிருந்த Su-30MKI ரக விமானம், ஜோர்ஹட்டிலிருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அஸ்ஸாமின் கர்பி அங்லாங் பகுதியில் விபத்துக்குள்ளானது. தேடுதல் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன என்று தெரிவித்தது.
இந்நிலையில் அசாமில் ஏற்பட்ட விபத்தில் விமானப்படை வீரர்கள் இருவர் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இது குறித்து விமானப்படை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,"சுகோய் சூ 30 விபத்தில் படுகாயமடைந்த ஸ்கொட்ரன் லீடர் அனுஜ் மற்றும் விமான லெப்டினன்ட் பூர்வேஷ் துரக்கர் ஆகியோரின் இழப்பை இந்திய விமானப்படை ஒப்புக் கொள்கிறது. இந்திய விமானப்படையின் அனைத்து பணியாளர்களும் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறார்கள். மேலும் இந்த துயரமான நேரத்தில் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருடன் உறுதியாக நிற்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யத் தயாரிப்பான சுகோய்-30 எம்கேஐ போர் விமானம் இந்திய விமானப்படையில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. 1997-ஆம் ஆண்டு முதல் இந்த ரக விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. சுமார் 250 விமானங்கள் இந்திய விமானப்படையில் உள்ள நிலையில், தற்போது அவற்றை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (HAL) உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.