

டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் அங்குள்ள மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். பழைய வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை மற்றும் டெல்லியை சுற்றியுள்ள அண்டை மாநிலங்களான ஹரியானா, பஞ்சாபில் எரிக்கப்படும் விவசாய கழிவுகள், தலைநகர் டெல்லியில் காற்றின் மாசு அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. குளிர்காலங்களில் இதன் தாக்கம் இன்னும் மோசமடையும் சூழலில் தற்போது மூச்சு விடவே சிரமப்படும் அளவிற்கு மோசமான கட்டத்தை எட்டியுள்ளது டெல்லி. குறிப்பாக கடந்த ஞாயிற்று கிழமை காற்று மாசின் அளவு 450 என்ற அபாய அளவை எட்டியதையடுத்து நான்காம் கட்ட கட்டுப்பாடுகளை காற்றுதர மேலாண்மை ஆணையம் அமல்படுத்தியது. இதனால் டெல்லியில் உள்ள மக்களுக்கு ஏர் பியூரிபையர்களும், மாஸ்குகளும் அன்றாட வாழ்க்கையில் அத்தியாவசியமான ஒன்றாகவே மாறிவிட்டது.
இதன் எதிரொலியாக மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்றும் ஆன்லைன் மூலம் வகுப்பு எடுக்கவும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டுமானத்திற்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதுபோல் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், 50% ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்ய (Work From Home) அனுமதிக்க வேண்டும் என்றும் மீறும் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது டெல்லி அரசு.
அதிகரித்து வரும் காற்று மாசால் அங்குள்ள குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் என பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, சுவாசக் கோளாறு உள்ளவர்கள் மூச்சுவிடக் கூட முடியாமல் சிரமப்படும் சூழல் உருவாகிறது. அதுபோல் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு காற்று மாசு மிகக் கடுமையான நிலைக்குப் போய்விட்ட நிலையில், சுற்றுச்சூழல் மாசடைவதை கட்டுப்படுத்த, டெல்லியில் பல்வேறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக டெல்லியில் இயங்கும் பிஎஸ் IVக்கு முந்தைய வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில் இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையில் விசாரணைக்கு வந்தது. முந்தைய உத்தரவில் பழைய வாகனங்கள் வைத்திருப்போர் மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்நிலையில், தற்போது டெல்லியில் நிலவும் மோசமான காற்றுமாசு பிரச்சனையை காரணம் காட்டிய டெல்லி அரசு, முந்தைய உத்தரவில் திருத்தம் செய்யுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.
பழைய வாகனங்களின் இருந்து வெளியேறும் கார்பன் மிக அதிகமாக இருப்பதாகவும் காற்று மாசு அதிகரிக்க அதுவே பிரதானக் காரணம் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
அரசின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், இதற்கு முன் பிறப்பித்த உத்தரவை, அதாவது தனது ஆகஸ்ட் 12ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை மாற்றியமைத்தது. அதன்படி, ‘10 ஆண்டுகள் பழமையான டீசல் அல்லது 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்கள் பிஎஸ்-IVஆக இருந்தால் மட்டுமே கடுமையான நடவடிக்கை எடுக்கப்படக் கூடாது என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.
அதாவது இதற்கு முன்பு 10 ஆண்டுகள் பழமையான டீசல் அல்லது 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது நிலையில் தற்போது அந்த உத்தரவு திருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் இனிமேல் பழைய வாகனங்களாக இருந்தாலும் பிஎஸ் IV வாகனங்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படாது, ஆனால் பிஎஸ் 3 அல்லது அதற்கு முந்தைய வாகனங்களை வைத்திருப்போர் மீது டெல்லி அரசு நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் காற்று மாசு ஏற்பட வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையும் ஒரு முக்கிய காரணமாக இருப்பதால் அதைக் கருத்தில் கொண்டே அரசும் பழைய வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது.