

இந்தியாவில் மளிகை பொருட்கள், காய்கறி, பழம் உள்ளிட்டவற்றை எப்படி குயிக் காமர்ஸ் செயலிகளில் ஆர்டர் செய்து 10 நிமிடங்களில் டெலிவரி பெறுகிறோமோ அதே போல இனிமேல் கேஸ் சிலிண்டரையும் டெலிவரி பெற முடியும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது இந்தியாவின் முன்னணி குயிக் காமர்ஸ் செயலியான ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட் (Swiggy Instamart) நிறுவனம், மளிகைப்பொருட்கள் மட்டுமின்றி இனி சிலிண்டரும் தங்கள் செயலியில் விநியோகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது. அதாவது மளிகை பொருட்கள், காய்கறி, பழம் உள்ளிட்டவற்றை எப்படி குயிக் காமர்ஸ் செயலிகளில் ஆர்டர் செய்து 10 நிமிடங்களில் டெலிவரி பெறுகிறோமோ அதே போல இனிமேல் கேஸ் சிலிண்டரையும் டெலிவரி பெற முடியும்.
இதற்காக ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட் நிறுவனம், அரசுக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனத்துடன் ஒரு முக்கிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
முதற்கட்டமாக பெங்களூவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் இனிமேல் சமையல் எரிவாயு சிலிண்டர்களை நாம் இன்ஸ்டாமார்ட் மூலம் வீட்டிற்கே டெலிவரி பெற முடியும். அதாவது ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் (Swiggy Instamart) செயலி மூலம் 10 முதல் 30 நிமிடங்களில் 5 கிலோ அல்லது 10 கிலோ சிலிண்டர்களை ஆர்டர் செய்து டெலிவரி பெறலாம்.
அங்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, விரைவில் சென்னை உள்ளிட்ட நாட்டின் பிற முக்கிய நகரங்களுக்கும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள நடைமுறைப்படி வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான 10 கிலோ மற்றும் சிறிய தேவைகளுக்கான 5 கிலோ எடையுள்ள வழக்கமான மெட்டல் சிலிண்டர்களை பெற வேண்டுமென்றால் அதனை புக் செய்து டெலிவரி பெற கேஸ் ஏஜென்சிக்கு செல்ல வேண்டி இருந்தது.
ஆனால் இனிமேல் வீட்டில் இருந்தபடியே இன்ஸ்டாமார்ட்டில் புக் செய்தாலே இவ்வகை சிலிண்டர்கள் டெலிவரி செய்யப்படும்.
ஹெச்பி நிறுவனத்தின் 5 கிலோ எடை கொண்ட சோட்டா சிலிண்டர் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள நிலையில், அண்மையில் தான் 10 கிலோ எடை கொண்ட ஹெச்பி நவ்யா சிலிண்டரை அறிமுகம் செய்தது.
இதனை வாங்க ஏற்கனவே சிலிண்டர் இணைப்பு இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை எனவும் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் வழக்கமான முறையைப் போலவே முதல்முறை வாங்கும்போது காலி சிலிண்டர் தரவேண்டாம், அடுத்தடுத்த முறை காலி சிலிண்டர்களை கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. ஹிந்துஸ்தான் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் பயிற்சி பெற்ற ஊழியர்கள் மூலமே இந்த சிலிண்டர்கள் பாதுகாப்பாக டெலிவரி செய்யப்படும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இளைஞர்கள், பேச்சிலர்கள், மாணவர்கள், வாடகை வீட்டில் வசிப்பவர்கள் மற்றும் சிறிய குடும்பங்களுக்கு இந்த சேவை பெரிய உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அவசரத் தேவைகளுக்கு இது மிகச் சிறந்த தீர்வாக அமையும். இனிமேல் சிலிண்டருக்கு புக் செய்து வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
இந்த சேவை மூலம், கேஸ் சிலிண்டர் வாங்குவது இனி மளிகை பொருட்களை போல எளிதாக மாறியுள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.