

நாடாளுமன்ற தொகுதி எல்லைகளை மக்கள் தொகை அடிப்படையில் மாற்றி அமைக்கும் தொகுதி மறுவரையறை (Delimitation) செயல்படுத்தப்பட்டால், தமிழ்நாட்டின் தற்போதைய மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 39-ல் இருந்து 59 ஆக உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத் தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வந்துவிட வேண்டும் என்று பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது. இதைத்தொடர்ந்து, தொகுதி மறுவரையறை பணிகளால், தமிழகத்திற்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து, தமிழகத்தை சேர்ந்த எம்.பி-க்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடத்த விஜய் தலைமையிலான தவெக அரசு முடிவு செய்தது.
இந்தியாவில் மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளை மாற்றிமைக்கவும், சீட்டுகளின் எண்ணிக்கையை மாற்றியமைக்கவும் கொண்டுவரப்படும் ஒரு சட்டமுன்வடிவு தொகுதி மறுவரையறை மசோதா (Delimitation Bill) ஆகும். மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை சீர்திருத்த இந்த மசோதா வழிவகை செய்கிறது. இந்த மறுவரையறை மூலம் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போதுள்ள 543-ல் இருந்து கணிசமாக (சுமார் 850 வரை) உயருவதற்கான வாய்ப்புகள் விவாதிக்கப்படுகின்றன. உச்ச நீதிமன்ற நீதிபதி அல்லது ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் மறுவரையறை ஆணையம் அமைக்க பரிந்துரை செய்கிறது.
குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய தென் மாநிலங்களுக்கு, மக்கள்தொகை பெருகிய வட மாநிலங்களுடன் ஒப்பிடும்போது நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் குறையும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உரிய விவாதங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் கோரி வருகின்றனர்.
இந்நிலையில் தொகுதி மறுவரையறை பணிகளால், தமிழகத்திற்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து, தமிழகத்தை சேர்ந்த எம்.பி-க்களுடனான கலந்தாய்வு கூட்டம் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு, சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில், முதல்வர் விஜய் தலைமையில் நடக்க உள்ளது.
இந்தத் தொகுதி மறுவரையறை கலந்தாய்வு கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, ஐயுஎம்எல் (IUML) ஆகிய கட்சிகள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படும் நிலையில், திமுக, அதிமுக, பாமக, மக்கள் நீதி மய்யம், தேமுதிக ஆகிய கட்சிகளின் எம்.பிக்கள் பங்கேற்கமாட்டார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தம் உள்ள 57 நாடாளுமன்ற உறுப்பினர்களில் முதலமைச்சர் விஜய் அழைத்துள்ள தொகுதி மறுவரையறை கூட்டத்திற்கு 20 உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தகக்து.
இதற்கிடையே நடைபெற்று வரும் நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடரில், திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளின் எல்லைகள் வரையறுக்கப்பட இருப்பதால், மக்கள்தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அதன்படி தொகுதி மறுவரையறை சட்ட மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறினால், நாடு முழுவதும் தற்போதுள்ள 543 தொகுதிகள் 850 ஆக உயரும்.
குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், 59 ஆக உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தாத மாநிலங்களுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என்பதால், குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் மூலம் வெற்றிகரமாக மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் இந்த நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
என்றாலும், தொகுதி மறுவரையறை சட்ட மசோதா நிறைவேறினால், தமிழ்நாட்டில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகள் 59 ஆக உயரும். அவ்வாறு உயர்ந்தால் என்னென்ன பெயர்களில் மக்களவை தொகுதிகள் இருக்கும் என்ற உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.
புதிய மறுவரையறை திட்ட வரைவின்படி அமையக்கூடிய உத்தேச 59 தொகுதிகள்:
சென்னை வடக்கு
சென்னை கிழக்கு
சென்னை மத்திய
சென்னை தெற்கு
சென்னை மேற்கு
தாம்பரம்
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
திருவள்ளூர்
திருத்தணி
வேலூர்
ராணிப்பேட்டை
திருவண்ணாமலை
திருப்பத்தூர்
வந்தவாசி / ஆரணி
திண்டிவனம்
விழுப்புரம்
கள்ளக்குறிச்சி
சேலம்
மேட்டூர்
ராசிபுரம்
நாமக்கல்
கடலூர்
சிதம்பரம்
ஓசூர்
கிருஷ்ணகிரி
தர்மபுரி
ஈரோடு
கோபிசெட்டிபாளையம்
பொள்ளாச்சி
தாராபுரம் / பழனி
கோவை கிழக்கு
கோவை மேற்கு
நீலகிரி
திருப்பூர்
திருச்சிராப்பள்ளி
தஞ்சாவூர்
கும்பகோணம்
மயிலாடுதுறை
நாகபட்டினம்
கரூர்
பெரம்பலூர்
அரியலூர் / லால்குடி
தூத்துக்குடி
திருச்செந்தூர்
திருநெல்வேலி
நாங்குநேரி / கன்னியாகுமரி
கன்னியாகுமரி / நாகர்கோவில்
மதுரை கிழக்கு
மதுரை மேற்கு
திருவாரூர்
புதுக்கோட்டை
சிவகங்கை
ராமநாதபுரம்
திண்டுக்கல்
தென்காசி
சிவகாசி
விருதுநகர்
தேனி
திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டாலும், மறுவரையறை ஆணையத்தின் இறுதி முடிவுகள் நாடாளுமன்ற ஒப்புதலுக்குப் பின்னரே இறுதி வடிவம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.