
மத்திய அரசால் நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2025-26 கல்வியாண்டிற்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009-ன்படி Right to Education (RTE) மாணவர் சேர்க்கை தொடங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழகத்துக்கு தேவையான நிதியை மத்திய அரசு விடுவித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளின் அடிப்படையில், ஒன்றிய அரசால் மாநிலத்திற்கு வழங்க வேண்டிய RTE நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
RTE Act மூலம், மாநிலம் முழுவதும் உள்ள 8,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் சுமார் 1.1 லட்சம் மாணவர்கள் இதன் மூலம் இலவசமாக பள்ளிகளில் சேர முடியும். இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் முக்கிய நோக்கம் என்னவெனில், மாணவர்கள் LKG அல்லது 1-ம் வகுப்பில் சேர்ந்து, 8-ம் வகுப்பு வரை எந்தவித கட்டணமும் இல்லாமல் கல்வி பயில முடியும் என்பது தான்.
RTE விதிகள் 2011 படி, சிறுபான்மை அல்லாத அனைத்து தனியார் பள்ளிகளிலும் LKG அல்லது 1-ம் வகுப்பில் சேரும் மாணவர்களில் 25% இடங்கள் RTE மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். அதாவது இந்த திட்டத்தின் கீழ் சிறுபான்மை அந்தஸ்து பெறாத அனைத்து தனியார் பள்ளிகளும் தங்கள் மொத்த மாணவர்கள் எண்ணிக்கையில் 25 சதவீதம் ஆளவுக்கு RTE மாணவர்களை இலவசமாக சேர்க்க வேண்டும். ஏற்கனவே அதே பள்ளியில் கல்வி பயிலும் தகுதியான மாணவர்களை பதிவு செய்ய 10 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க தகுதியானவர்கள் :
* பொருளாதாரத்தில் நலிந்தோர், ஆதரவற்றவர்கள், எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர், 3-ம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள், துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.
* ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள் :
வருமானச் சான்றிதழ், இருப்பிட சான்று, சாதிச் சான்றிதழ்
விண்ணப்பதாரர்கள் rte.tnschools.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம். ஒரு நபர் அதிகபட்சம் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள 5 பள்ளிகளை தேர்வு செய்ய முடியும். ஒரு பள்ளிக்கு விண்ணப்பங்கள் ஒதுக்கீட்டை விட அதிகமாக வந்திருந்தால் குலுக்கல் (Random Selection) முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
RTE தகுதியுடைய மாணவர்களிடமிருந்து எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது. ஏற்கனவே கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தால், 7 நாள்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான சிறப்பு குழுக்கள் மூலம் சேர்க்கை நடைமுறை கண்காணிக்கப்படும் என்றும், புகார்களுக்கு பிரத்தியேகமான உதவி எண் மற்றும் மின்னஞ்சல் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு, ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில், இச்சேர்க்கை நடைமுறையை தெளிவான, சமத்துவமான மற்றும் குழந்தை மையப்படுத்தப்பட்ட முறையில் மேற்கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.