

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். 2011-ம் ஆண்டுக்குப் பிறகு 2021-ம் ஆண்டு நடத்த வேண்டிய கணக்கெடுப்பு கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது 2025-2026-ம் ஆண்டு காலகட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியுள்ளன.
மாநிலத்தின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும், வலுவான கொள்கைகளை உருவாக்கவும், திட்டமிடுதலுக்கும் இந்த துல்லியமான தரவு சேகரிப்பு மிக முக்கியமானது.
அந்த வகையில் கிட்டதட்ட 16 ஆண்டுகளுக்கு பிறகு, தமிழகம் முழுவதும் இன்று (ஆகஸ்ட் 1-ம்தேதி) முதல் வரும் 30-ம்தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி வீடு வீடாக நடைபெற உள்ளது.
இந்திய வரலாற்றில், 2025-2026-ம் ஆண்டு கணக்கெடுப்பு முழுமையாக டிஜிட்டல் முறையில் நடக்கிறது. மக்கள் தங்களை பற்றிய தகவல்களை "செல்போன் செயலி மூலம்" தாங்களாகவே பதிவு செய்யும் வசதியும் இருக்கிறது.
இப்பணியில் 19,000 அதிகாரிகளின் மேற்பார்வையில் 1.15 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் ஈடுபட உள்ளனர். கணக்கெடுப்பில் ஈடுபடும் களப்பணியாளர்கள் அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று 33 கேள்விகளை கொண்ட படிவத்தை பயன்படுத்தி தகவல்களை திரட்டுவார்கள்.
அதே சமயத்தில் தனிப்பட்ட தரவுகள் பாதுகாக்கப்படுவதும் உறுதி செய்யப்படும். அனைத்து பொதுமக்களும் வீடுகள்பட்டியல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்புப் பணியின் போது கணக்கெடுப்பாளர்களின் கேள்விகளுக்கு சரியான விவரங்களை வழங்கி தங்களது முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
ஜூலை 17ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் விவரங்களை இணையவழியில் சமர்ப்பித்துள்ளனர்.
இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, மக்களிடம் 33 கேள்விகள் கேட்கப்படும். எனவே, அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
1. கட்டிட எண் (நகராட்சி அல்லது உள்ளாட்சி)
2. சென்சஸ் வீட்டு எண்
3. மக்கள் தொகை கணக்கெடுப்பு வீட்டு தரையின் பிரதான கட்டுமானப் பொருள்
4. மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லத்தின் சுவரின் பிரதான கட்டுமான பொருள்
5. மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லத்தின் கூரையின் பிரதான கட்டுமானப் பொருள்
6. மக்கள் தொகை கணக்கெடுப்பு வீட்டின் நிலைமை
7. மக்கள் தொகை கணக்கெடுப்பு வீட்டின் பயன்பாடு
8. வீட்டு எண்
9. வீட்டில் வசிக்கும் நபர்களின் மொத்த எண்ணிக்கை
10. குடும்ப தலைவரின் பெயர்
11. குடும்ப தலைவரின் பாலினம்
12. குடும்ப தலைவரின் சாதி (பட்டியல்/பழங்குடியினர்/மற்ற பிரிவைச் சேர்ந்தவரா என்பது)
13. வீட்டின் உரிமை நிலை
14. குடும்பத்திற்கான வசிக்கும் அறைகளின் எண்ணிக்கை
15. குடும்பத்தில் உள்ள திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை
16. குடிநீருக்கான பிரதான ஆதாரம்
17. குடிநீர் ஆதாரம் அமைந்துள்ள இடம்
18. விளக்கு ஒளிக்கான பிரதான ஆதாரம்
19. கழிப்பட வசதி
20. கழிப்பறை வசதியின் வகை
21. கழிவுநீர் வெளியேற்றம்
22. குளிக்கும் வசதி
23. சமையலறை மற்றும் எல்பிஜி/பிஎன்ஜி இணைப்பு வசதி
24. சமையலுக்கு பயன்படுத்தப்படும் முக்கிய ஏரிபொருள்
25. ரேடியோ/டிராசின்ஸ்டர்
26. தொலைக்காட்சி
27. இணையதள வசதி
28. மடிக்கணினி/கணினி
29. தொலைபேசி/ஸ்மார்ட்போன்
30. மிதிவண்டி/ஸ்கூட்டர்/மோட்டர் சைக்கிள்/மொபெட்
31. கார்/ஜீப்/வேன்
32. வீட்டில் சாப்பிடும் முக்கிய தானியம்
33. கைபேசி எண் (மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடர்பான தகவல்தொடர்புகளுக்கு மட்டும்).
- ஆகிய 33 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான விடைகள் பதிவு செய்யப்படுகிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது மக்கள் தவறான தகவலை அளித்தால் ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.