

தமிழக முதலமைச்சர் விஜய் தேர்தல் பிரசாரத்தின் போது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக தவெக ஆட்சிக்கு வந்ததும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
அதன்படி தமிழகத்தின் 13-வது முதலமைச்சராக விஜய் கடந்த மே மாதம் 10-ம்தேதி பதவியேற்றுக்கொண்டதும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்குவதற்கான உத்தரவை உடனடியாக பிறப்பித்தார்.
இந்த நிலையில் இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் அதிரடிப்படையை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். மேலும் இந்த விழா தொடங்கியதும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
விழாவை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் விஜய், ‘பெண்களை பற்றிய செய்திகளை கேள்விப்படும் போதெல்லாம் பதறுது. இந்த பிரச்சனைகள் எல்லாம் ஏன் நடக்குது என ஆராயும் போது ஒரே இடத்தில் வந்து நிக்குது. போதைப்பொருள் கலாச்சாரம். இன்னைக்கு இந்தப் பிரச்சனை புதுசா கிளம்பி வரல. காலம் காலமா நடக்குது. அதை கண்டுக்காம விட்டதுதான் காரணம் என்று கூறினார்.
பெண்களுக்கு எதிரான கொடுமையை சிறிதளவு கூட சகித்து கொள்ள முடியாது. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை தண்டனை இருக்கும். பெண்களை தொந்தரவு செய்துவிட்டு தப்பித்துக் கொள்ளலாம் என நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். பெண்களை யாரும் டிஸ்டர்ப் பண்ணினா நடவடிக்கை ரொம்ப கடுமையா ஃபாஸ்டா இருக்கும்.
மேலும், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிபடைக்கு முதற்கட்டமாக ரூ.354 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக 2500 புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும்’ என்று கூறினார்.
அதன்பிறகு காவல்துறை வாகனத்தில் ஏறி நின்று அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து விழாவில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையின் லச்சினையை வெளியிட்ட முதலமைச்சர் விஜய், சிறப்பு படையின் ரோந்து வாகனத்தையும் ஓட்டி பார்த்தார்.
முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்த சிங்கப்பெண் சிறப்புப் பிரிவுக்கு ஐஜியாக (IG)கே. பவானீஸ்வரி நியமிக்கப்பட்டார். அதோடு முதலமைச்சர் விஜய்யின் நேரடி வழிகாட்டுதல் மற்றும் கண்காணிப்பின் கீழ் இந்த அதிரடிப்படை பிரத்தியேகமாகச் செயல்படவுள்ளது.
இவ்விழாவில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார், உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன், தமிழ்நாடு டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் மற்றும் உயர் காவல் அதிகாரிகளும், அரசுத்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். முதலமைச்சர் விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகரும் இந்த விழாவில் கலந்துகொண்டார்.
மேலும் 500க்கும் அதிகமான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பெண் காவலர்கள், அமைச்சர்கள், தவெக எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த படையில் ஒரு காவல் கண்காணிப்பாளர், 2 துணை காவல் கண்காணிப்பாளார்கள், 4 ஆய்வாளர்கள் உள்பிட் 30-க்கும் மேற்பட்ட போலீசார் முதல்கட்டமாக நியமிக்கப்பட உள்ளனர்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பெண்களின் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டுள்ள பிரத்யேகக் காவல் பிரிவாகும்.
அந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் நோக்கம், பொது இடங்கள், பேருந்து நிறுத்தங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் இணைய வழியிலும் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைத் தடுத்து, அவசர காலங்களில் உடனடிப் பாதுகாப்பை வழங்குவதாகும்.
மேலும் குற்றச் சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ள இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து கண்காணித்தல், ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்துதல் மற்றும் ஆபத்தில் உள்ள பெண்களை உடனடியாக மீட்டல் போன்ற பணிகளை இப்படை மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.