

தமிழகத்தில் பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் (Mayonnaise) மீதான தடையை அரசு மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து இருப்பதால் மயோனைஸை விரும்பி சாப்பிடுபவர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஏனெனில் இன்று மயோனைஸ் சிறு குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாகும்.
ஆம்! முட்டையின் வெள்ளைக் கருவுடன், வெஜிடபிள் ஆயில், வினிகர் சேர்த்து மயோனைஸ் தயாரிக்கப்படுகிறது. சான்ட்விச், ஷவர்மா மற்றும் பர்கர் போன்ற உணவுப் பொருட்களில் மயோனைஸ் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்த உணவுப்பொருட்களுக்கு அதிகளவு சுவையை கூட்டுவது இந்த மயோனைஸ் தான். ஆனால் ஷவர்மா போன்ற உணவுகளுடன் பரிமாறப்படும் மயோனைஸால் உணவு நச்சுத்தன்மை ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்ததையடுத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் இந்த மயோனைஸ் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தடை செய்யப்பட்டது.
சால்மோனெல்லா டைபிமிரியம், சால்மோனெல்லா என்டிரிடிடிஸ், எஸ்கெரிச்சியா கோலி மற்றும் லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்ஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் மாசுபடுவதால், முட்டைகளால் செய்யப்பட்ட மயோனைஸ் உணவு மூலம் பரவும் நோய்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது.
மேலும் முறையான வெப்பநிலையில் சேமிக்கப்படாத போது, இது கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் உடல்நலக் குறைபாடுகளை உண்டாக்கும் என்பதால், பொதுமக்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் உணவுப் பாதுகாப்பு குறித்த கவலைகளைக் கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டு அரசு முதன்முதலில் இந்தத் தடையை விதித்திருந்தது. அந்தத் தடையானது கடந்த ஏப்ரல் 8-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தற்போது அதனை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
பச்சைக் முட்டைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் மயோனைஸின் உற்பத்தி, பதப்படுத்துதல், பேக்கிங், சேமிப்பு, போக்குவரத்து, விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றின் மீதான தடையை, இந்த ஆண்டு ஏப்ரல் 8 முதல் மேலும் ஓராண்டுக்குத் தமிழக அரசு நீட்டித்துள்ளது.
பச்சை முட்டை மயோனைஸ் ஒரு 'அதிக ஆபத்துள்ள உணவு' (High-risk food) என வகைப்படுத்தப்பட்டுள்ளதால், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம் 2006-ன் (Food Safety and Standards Act, 2006) கீழ், இந்தத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இருப்பினும், சைவ மயோனைஸ் (Veg Mayonnaise) அல்லது பதப்படுத்தப்பட்ட முட்டைகளை (Pasteurized eggs) கொண்டு தயாரிக்கப்படும் மயோனைஸ்களுக்கு இந்தத் தடை பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபகாலமாக உணவுப் பாதுகாப்புத் தரங்கள் குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், பொது சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துவதே இந்த தடையின் நோக்கம் என்று அரசு தெரிவித்துள்ளது.