

ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உச்சத்திலேயே இருப்பதால் அந்நிய செலாவணி கையிருப்பை சேமிக்க மக்கள் ஓராண்டு காலத்திற்கு தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி சில தினங்களுக்கு முன்னர் கோரிக்கை விடுத்தார். இதனை அடுத்து பொதுமக்கள் தங்கம் வாங்குவதை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு, 6 சதவீதமாக இருந்த தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 15 சதவீதமாக உயர்த்தி இருக்கிறது.
இத்தகைய சூழலில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறித்த கவலைகளை தொடர்ந்து, மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு தங்கம், வெள்ளி நகை வியாபாரிகள் சம்மேளனம், தமிழகத்தில் உள்ள நகைக்கடை உரிமையாளர்கள் தங்க நாணயம் விற்பனையை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்துள்ளன.
சிறு மற்றும் பெரிய நகை வியாபாரிகள், உற்பத்தியாளர்கள், முக்கிய நகை சில்லறை விற்பனைச் சங்கிலிகள், நுகர்வோர் மற்றும் பெருநிறுவனங்களுக்கு நாணயங்கள் மற்றும் தங்கக் கட்டிகளின் விற்பனையை நிறுத்துவதாகவும், அவற்றிற்கான ஆர்டர்களைப் பெறுவதை நிறுத்துவதாகவும் ஜி.ஜே.எஃப்-க்கு (GJF) உறுதியளித்துள்ளன.
உயர்ந்த கச்சா எண்ணெய் விலை மற்றும் மேற்கு ஆசியாவில் நிலவும் புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில், அதிகரித்து வரும் விலைமதிப்புள்ள உலோகங்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும், இந்தியாவின் அந்நிய செலாவணிக் கையிருப்பைப் பாதுகாக்கவும் அரசாங்கம் முயற்சிக்கும் வேளையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தங்க நாணயங்கள் விற்பனையை நிறுத்துவதுடன், தங்கம் சேமிப்புத் திட்டங்கள் மற்றும் இதர விளம்பரத் திட்டங்களையும் ஊக்குவிக்க வேண்டாம் என்றும் தமிழ்நாடு நகைக்கடை உரிமையாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தங்கம் இந்தியர்களின் வாழ்வில் இரண்டற கலந்த ஒன்று. தங்கத்தின் விலை கடந்த பல ஆண்டுகளாக சீரான ஏற்றத்தில் இருந்து வந்தது. ஆனால் கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் தங்கத்தின் விலை புதிய உச்சமாக ரூ.50 ஆயிரத்தை தொட்டது. அதன் பின்னரும் விலை ஏறுமுகத்திலேயே இருந்தது. கடந்த ஜனவரி மாதம் ஒரு கிராம் தங்கம் ரூ.16800க்கும், ஒரு சவரன் ரூ.1,34,400க்கும் விற்பனையாகி வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.
அதனை தொடர்ந்தது விலை உயர்ந்தாலும் தங்கம், வெள்ளியை வாங்குபவர்கள் வாங்கிக்கொண்டுதான் இருந்தார்கள். இந்நிலையில் 13-ம்தேதி தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தி மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்ட நிலையில் ஒரே நாளில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1070ம், பவுனுக்கு ரூ.8560 உயர்ந்தது. அதேசமயம் மாலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.400ம், பவுனுக்கு ரூ.3200ம் குறைந்தது.
மத்திய அரசு திடீரென முன்னறிவு இல்லாமல் ஒரே இரவில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்திய நிலையில் ஜிஎஸ்டி (GST) வரியும் உயர்த்தப்படலாம் என வதந்திகள் பரவி வருகின்றன. தற்போது விற்கப்படும் விலையில் சுமார் 3,000 ரூபாய் வரி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலை ஏற்ற இறக்கங்களால் கடந்த ஓராண்டில் நகை விற்பனை 60% சரிந்துள்ளதாக தமிழ்நாடு நகைக்கடை உரிமையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த வரி உயர்வு மற்றும் நகைக்கடை உரிமையாளர்களின் இந்த திடீர் முடிவு, வரும் நாட்களில் தங்கத்தின் மீதான முதலீட்டு முறையை முற்றிலும் மாற்றியமைக்க வாய்ப்புள்ளது. மேலும் நகைக்கடை உரிமையாளர்கள் இந்த நெருக்கடியான சூழலில் தங்க நாணய விற்பனையை நிறுத்துவதாக அறிவித்திருப்பது சாமானிய மக்களுக்கு அதிர்ச்சியை தந்திருக்கிறது.