

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் பல்வேறு பாடப்பிரிவுகளில் இளங்கலை, முதுகலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளை தொலைதூரக் கல்வி திட்டத்தின் மூலம் வழங்கி வருகிறது.மேலும் ஆராய்ச்சி படிப்பு என அழைக்கப்படும் பிஎச்.டி படிப்பையும் முழு நேரமாகவும் பகுதி நேரமாகவும் அளித்து வருகிறது. இதற்கான மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு 2 முறைகள் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறுகிறது.
இந்நிலையில், 2026 ஜூன் பருவ பிஎச்டி சேர்க்கைக்கான அறிவிப்பு தற்போது இந்தப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில்,2026 ஜூன் பருவ பிஎச்டி முழு நேர மற்றும் பகுதி நேர மாணவர் சேர்க்கைக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த முனைவர் (பிஎச்.டி) பட்டப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் தங்களது முதுகலைப் பட்டப்படிப்பில் குறைந்தது 55 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.நலிந்த பிரிவு மாணவர்களுக்கு இந்த மதிப்பெண்ணில் தளர்வு உண்டு.
பல்வேறு படிப்புகளுக்கான வழிகாட்டிகளின் கீழ் உள்ள காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப ஆராய்ச்சிப் படிப்புகளுக்கான சேர்க்கை எண்ணிக்கையும் ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும். இப்படிப்பிற்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பிப்பவர்களுக்கு சேர்க்கையில் வாய்ப்பு வழங்கப்படும்.
ஒரு பல்கலைக்கழகத்தின் உச்சப்பட்ச படிப்பாகக் கருதப்படும் இப்படிப்பை வெற்றிகரமாக முடிப்பவர்கள் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணியில் சேர வாய்ப்புகள் உண்டு.இதனுடன் பல்கலைக்கழக மாண்யக் குழுவும் மாநில அரசும் அவ்வப்போது நடத்தும் உதவிப்பேராசிரியர் தகுதித் தேர்விலில் கலந்துக் கொண்டு வெற்றி பெறுவது நல்லது.எனவே,விருப்பமுள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வது நல்லது.
இந்தப் பிஎச்.டி., படிப்பிற்கான் விண்ணப்பப் படிவம், விதிமுறைகள்,விண்ணப்பிக்க இறுதி நாள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.tnou.ac.in) விரிவாக அறிந்துகொள்ளலாம் எனவும் பல்கலைக்கழக பதிவாளரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.