

தமிழக அரசு ஊழியர்கள், அரசு ஓய்வூதியர்களுக்கான மற்றும் தகுதியுடைய குடும்ப உறுப்பினர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் தொகையை ரூ.7.5 லட்சமாக உயர்த்தி, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் பணமில்லா முறையில் ரூ.7.50 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெறலாம்.
அரசின் அடித்தளமாக, அச்சாணியாக, முதுகெலும்பாக விளங்குபவர்கள் அரசு அலுவலர்கள். இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலர்களின் நலனில் எப்போதும் தனி அக்கறை கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அரசு அலுவலர்கள் பணி தொடர்பாகவும், ஊதியம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பாகவும் பல்வேறு புதிய நடைமுறைகளை அரசு கொண்டுவந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
இதற்கிடையே, தமிழக அரசு ஊழியர்கள், அரசு ஓய்வூதியர்களுக்கான மற்றும் தகுதியுடைய குடும்ப உறுப்பினர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் தொகையை உயர்த்தி, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசுத் துறைகளில் வேலை பார்க்கும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்காக, செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், தமிழக அரசு மாற்றம் செய்து வருகிறது. அந்த வகையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு இதற்கு முன்பு நடைமுறையில் இருந்த ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு மற்றும் ரூ.10 லட்சம் சிறப்பு சிகிச்சைகளுக்கான காப்பீடு திட்டம் கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்தது. அதனை தொடர்ந்த புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் நடைமுறைக்கு வருவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் ஜூலை 1 முதல் வரும் 2031ம் ஆண்டு ஜூன் 30-ம்தேதி வரை 5 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான அடிப்படை சிகிச்சைக்கான காப்பீட்டுத் தொகை ரூ.7.5 லட்சமாகவும், 46 வகையான தீவிர நோய்களுக்கான காப்பீடு ரூ.12 லட்சமாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கு முன்பிருந்த 'யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்' (United India Insurance)நிறுவனமே தற்போதும் தொடர்ந்து, இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இதற்காக அரசுத்துறையில் வேலை பார்க்கும் ஊழியர்களின் மாதச் சம்பளத்தில் இருந்து ரூ.390 மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தில் இருந்து ரூ.644 பிடித்தம் செய்யப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு மேல், கூடுதலாக வரும் பிரீமிய தொகையை, தமிழக அரசே ஏற்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுதவிர, காப்பீட்டுத் தொகை ரூ.7.5 லட்சமாக இருந்தாலும், 'கார்பஸ்' (Corpus) நிதி மற்றும் இதர சலுகைகள் மூலம் அதிகபட்சமாக ஒரு குடும்பம் ரூ.27 லட்சம் வரை மருத்துவ உதவி பெற முடியும். மேலும், துப்புரவு பணியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்டோருக்கு, 10,000 ரூபாய்க்கு கீழ் சம்பளம் இருந்தால், அதாவது குறைந்த ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கான பிரீமியத் தொகையை முழுமையாக அரசு ஏற்கும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கான தனியார் மருத்துவக் காப்பீடுகள் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் (எ.கா: ஆயுஷ்மான் வயா வந்தனா அட்டை) மூலம் தனிநபர் காப்பீடுகளையும் நீங்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
குறிப்பாக தூய்மைப் பணியாளர்கள், அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்கள் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தொடர்ந்து பயன் அடைவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுதவிர, வங்கிகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடும், ரூ.1 கோடி வரையிலான விபத்துக் காப்பீடும், மேலும் பணியில் இருக்கும்போது உயிரிழக்கும் ஊழியர்களின் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் மகளுக்கு திருமண உதவிகளும் வழங்கப்படுகின்றன.
மருத்துவக் காப்பீடு சிறப்பு அம்சங்கள் :
* அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் பணமில்லா முறையில் ரூ.7.50 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெறலாம்.
* 46 வகையான தீவிர நோய்களுக்கு ரூ.12 லட்சம் வரை சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
* தமிழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட 1,535 தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணமில்லா (Cashless) முறையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
* இந்த திட்டத்தின் மூலம் 2,992 சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகளும் சேர்க்கப்பட்டுள்ளது.