

இந்தியாவில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், அவர்களின் சமூக, பொருளாதார நிலையை உயர்த்தவும் மத்திய, மாநில அரசு பல்வேறு பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து அதனை சிறப்பாக செயல்படுத்தியும் வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு, ஆதரவற்ற மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு, புதுமைப் பெண் திட்டம், மகளிர் உரிமைத்தொகை, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், மகளிருக்கான திருமண நிதி உதவி, தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் (மகளிர் திட்டம்) போன்ற பல்வேறு சிறப்புத் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், தமிழக அரசு சார்பில் முதியோர், விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், திருமணம் ஆகாமலேயே முதிர் வயதை அடைந்த ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு என்று எந்தவொரு திட்டமும் இல்லாமல் இருந்தது.
அத்தகைய பெண்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு கொண்டு வந்த திட்டம் தான் 'திருமணம் ஆகாத பெண்கள் ஓய்வூதிய உதவித்தொகை திட்டம்' என்பதாகும்.
அந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 50 வயதுக்கு மேற்பட்ட, ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள திருமணமாகாத பெண்களுக்கு, தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் மாதந்தோறும் ரூ.1,000 ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பெண்கள் சில தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு விதிமுறைகளை விதித்துள்ளது. அது என்னவென்று அறிந்து கொள்ளலாம் வாங்க..
UWPS திட்டத்திற்கான தகுதிகள் மற்றும் விதிமுறைகள் என்னென்ன?
* தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
* திருமணம் ஆகாத பெண்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
* பெண்ணின் வயது 50 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
* விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
* திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் (Live-in Relationship) பெண் விண்ணப்பிக்க தகுதியில்லை.
* அரசு ஊழியராகவும், வருமான வரி செலுத்துபவராகவும் இருக்கக்கூடாது.
* விண்ணப்பதாரர் தமிழக அரசின் மற்ற எந்தவொரு நலத்திட்டத்தில் இருந்தும் பண உதவி பெறுபவராக இருக்கக் கூடாது.
* விண்ணப்பதாரரின் பெயரில் உள்ள அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்
திருமணமாகாதவர் என்பதற்கான சான்றிதழ்
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
ஆதார் அட்டை
வயதுச் சான்றிதழ்
வருமானச் சான்றிதழ்
வாக்காளர் அடையாள அட்டை
சாதிச் சான்றிதழ்
சொத்து மதிப்புச் சான்று மற்றும் வங்கி கணக்கு புத்தகம்
சுய அறிவிப்பு பிரமாணப் பத்திரம் (Self-declaration Affidavit)
விண்ணப்பிக்கும் முறை
உங்கள் பகுதியில் உள்ள அரசு இ-சேவை மையங்கள் அல்லது அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த நகராட்சி அல்லது பஞ்சாயத்து அலுவலகத்திற்கு நேரில் சென்று இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் பெறப்பட்ட 30 முதல் 45 நாட்களுக்கு பிறகு, விண்ணப்பத்துக்கு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், உங்களுக்கு அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து ஓய்வூதியம் மாதந்தோறும் வழங்கப்படும்.
நீங்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்த பிறகு, கூடுதல் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பப் படிவங்களுக்கு மற்றும் விண்ணப்பத்தின் நிலையை தெரிந்துக் கொள்ளவும் https://www.tnesevai.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.