

பொதுமக்களுக்கு அமைதியைப் பரிசளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் எண்ணற்ற பூங்காக்கள் இருக்கின்றன. இந்த பூங்காக்கள் பகலில் மட்டுமே திறந்திருக்கும். ஆனால் தற்போது இரவிலும் திறந்திருக்கும் ஒரு பூங்காவை மாமல்லபுரத்தில் தமிழக அரசு உருவாக்கியுள்ளது. இரவில் ஒளிரும் தோட்டமாக இந்தப் பூங்கா பொதுமக்களுக்கு வண்ணமயமாக காட்சியளிக்கிறது.
தமிழ்நாட்டின் முதல் ‘ஒளிரும் தோட்டம் (Glow Garden) எனும் பகல் - இரவு பொழுதுபோக்கு பூங்கா, மாமல்லபுரம் கிழக்கு ராஜா வீதியில் திறக்கப்பட்டுள்ளது. ரூ.8 கோடி மதிப்பீட்டில், 2.48 ஏக்கர் பரப்பளவில் உள் மற்றும் வெளிப்புற வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த குளோ கார்டனை சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்குச் (TTDC) சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில், ஒளிரும் விளக்குகளுடன் கூடிய இருக்கைகள், செயற்கை மரங்கள், செடிகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நடைபாதைகள், செல்ஃபி எடுக்கும் இடங்கள், உணவு கடைகள், மற்றும் ஒரு திறந்தவெளி அரங்கம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
குளோ கார்டனை ‘Sunvin Mamallapuram Glow Garden LLP’ என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதே நிறுவனம் தான் பூங்காவின் செயல்பாடு மற்றும் பராமரிப்பையும் மேற்கொள்கிறது.
சூரியன் மறைந்த பிறகு சுற்றுலாப் பயணிகளால், எந்த இடத்திற்கும் என்று சென்று சுற்றிப் பார்க்க முடியாது. ஏனெனில் தமிழ்நாட்டில் உள்ள பல நினைவுச் சின்னங்கள் மாலை நேரத்திற்குப் பிறகு மூடப்படுகின்றன. ஆனால் இரவு நேரத்தை மிகச் சிறப்பானதாக மாற்ற மாமல்லபுரத்தில் உள்ள குளோ கார்டன் உதவும்.
மேலும் அருகிலுள்ள கிராம மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த கார்டன் ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும்.
நுழைவு கட்டணம்:
மரகத பூங்காவின் உள்ளே அமைந்திருக்கும் இந்த குளோ கார்டனை, பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிட நுழைவு கட்டணம் ரூ.100 ஆகும்.
இதுதவிர பொம்மை ரயில், ஜோக்கர் பொம்மை சவாரி, கிரேசி ரோலர் மற்றும் தேனீ கரூசல் போன்றவற்றை அனுபவிக்க ரூ.200 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மற்ற சவாரிகளாக பஞ்சி டிராம்போலின், ஹ்யூமன் ஜைரோ, 360 டிகிரி சைக்கிள், மற்றும் குழந்தைகளுக்கான படகு சவாரி ஆகியவற்றுக்கு தனித்தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.
குளோ கார்டனை ரூ.8 கோடி மதிப்பீட்டில் உருவாக்கியுள்ளது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம். மாலை 6 மணிக்குப் பிறகு இங்குள்ள வரலாற்றுச் சின்னங்கள் மூடப்பட்ட பிறகு, குளோ கார்டன் மிகச் சிறந்த இரவு நேர சுற்றுலா தலமாக செயல்படும்.
இப்போதே பொதுமக்கள் மத்தியில் குளோ கார்டன் அதிக வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இன்னும் சில தினங்களில் தமிழ்நாட்டின் மிக முக்கிய சுற்றுலா தளமாக இது உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே மாமல்லபுரம் தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இருக்கும் நிலையில், தற்போது குளோ கார்டனும் மாமல்லபுரத்திற்கு மற்றுமொரு நற்பெயரை சேர்த்துள்ளது.