

இந்திய நாட்டின் 80-வது சுதந்திர தின விழா வருகின்ற ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு இந்த சுதந்திர தின விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கப் போகிறது. இதற்கு முக்கிய காரணமே புதிய முதலமைச்சர் ஜோசப் விஜய் தான்.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோட்டை கொத்தளத்தில் தமிழக முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றுவது வழக்கம். அவ்வகையில் முதன்முறையாக முதல்வர் ஜோசப் விஜய், ஆகஸ்ட் 15-ம் தேதி தேசிய கொடியை ஏற்ற இருக்கிறார்.
திராவிட கட்சிகள் அல்லாத ஒரு தலைவர் தேசிய கொடியை ஏற்ற இருப்பது இதுவே முதல் முறை. அதோடு சுதந்திர தினத்தில் தேசியக் கொடியை ஏற்றும் 7-வது முதலமைச்சராக ஜோசப் விஜய் இருக்கப் போகிறார்.
இதற்கு முன்னதாக முன்னாள் அமைச்சர்கள் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 6 பேர் சுதந்திர தினத்தில் தேசிய கொடியை ஏற்றியுள்ளனர்.
1947 ஆகஸ்ட் 15-ம் தேதி இந்திய நாடு ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றதை, கொண்டாடும் விதமாக சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தைப் போலவே, சுதந்திர தினத்திலும் அந்தந்த மாநில ஆளுநர்கள் தான் முதலில் தேசியக் கொடியை ஏற்றி வந்தனர்.
ஆனால் இதற்கு விதிவிலக்காக 1974 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, சுதந்திர தினத்தில் முதன்முறையாக தேசிய கொடியை ஏற்றினார். அன்றிலிருந்து இன்றுவரை சுதந்திர தினத்தில் முதலமைச்சர்களும், குடியரசு தினத்தில் மாநில ஆளுநர்களும் தேசிய கொடி ஏற்றுவது வழக்கமானது. இந்த நடைமுறை தான் தற்போது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் சுதந்திர தினத்தின் போது கோட்டை கொத்தளத்தில் இதுவரை தேசிய கொடியை ஏற்றிய முதலமைச்சர்கள் அனைவருமே திமுக மற்றும் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் தான். ஆனால் இம்முறை முதன்முறையாக திராவிட கட்சிகள் அல்லாத வேறொரு கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் தேசிய கொடியை ஏற்ற இருக்கிறார். இது தமிழக வரலாற்றில் சிறப்பு வாய்ந்த தருணமாக பதிய உள்ளது.
இதன்படி சென்னையில் தலைமைச் செயலகம் செயல்பட்டு வரும் புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் ஆகஸ்ட் 15-ல் தேசிய கொடியை ஏற்றவுள்ளார் முதல்வர் விஜய்.
தேசிய கொடி ஏற்றுவதில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவுக்கு அடுத்து சினிமா பின்புலத்தைச் சேர்ந்த 3-வது முதல்வர் என்ற பெருமையைப் பெறவுள்ளார் முதல்வர் விஜய்.
சுதந்திர தின விழாவின் போது காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ள இருக்கிறார் முதல்வர் விஜய். இந்த விழாவில் தமிழ்நாட்டுக்கும், தமிழுக்கும் பங்காற்றிய வீரர்களுக்கு ‘தகைசால் தமிழர் விருதுடன்’, ரூ.10 லட்சம் காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.
துணிவு மற்றும் சாகச செயல்களில் ஈடுபட்ட வீரர்களுக்கு கல்பனா சாவ்லா விருது, அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கிய விஞ்ஞானிகளுக்கு அப்துல் கலாம் விருது, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மகளிர் நலனுக்காக தொண்டாற்றியவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சமூகப் பணியாளர் விருது, முதல்வரின் நல் ஆளுமை விருது, மாநில இளைஞர் விருதுகள் மற்றும் சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதலமைச்சர் விருது உள்ளிட்ட விருதுகளை வழங்கி, சாதனையாளர்களை கௌரவிக்க இருக்கிறார் முதல்வர் விஜய்.
இந்நிலையில் சுதந்திர தினத்திற்கான அணிவகுப்பு ஒத்திகை சென்னை மெரினா கடற்கரையில் நடந்து வருகிறது.