

தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என முதல்வர் விஜய் பதவியேற்ற அன்றே தெரிவித்தார். இதன்படி பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை உருவாக்கினார் முதல்வர்.
சிங்கப்பெண் அதிரடிப் படையினர், தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதோடு பெண்களின் பாதுகாப்பில் துரிதமாக செயல்பட்டு பொதுமக்களின் ஆதரவையும் பெற்று வருகின்றனர். இந்நிலையில் பெண்களுக்கு மேலும் 2 சிறப்புத் திட்டங்களை களத்தில் இறக்க முடிவு செய்துள்ளார் முதல்வர் விஜய்.
ஏற்கனவே மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ள சூழலில், வேலைக்கு செல்லும் பெண்களின் துயர் துடைக்கும் திட்டத்தைக் கொண்டு வர இருக்கிறது தமிழக அரசு.
மாதவிடாய் விடுப்பு:
அன்றாட வாழ்வில் பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று மாதவிடாய். இந்த நாட்களில் பெண்கள் நன்றாக ஓய்வெடுக்க வேண்டியது அவசியம். ஆனால் மாதவிடாய் காலத்தில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு விடுப்பு அளிப்பதில் பல நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன.
இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு கட்டாய விடுப்பு அளிப்பதை வலியுறுத்த சிறப்புக் குழுவை அமைக்கவுள்ளது தமிழக அரசு.
இந்த சிறப்புக் குழு, மாதவிடாய் காலத்தின் போது ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குவதற்கான விதிமுறைகளை வகுக்கும். நாட்டின் பிற மாநிலங்களில் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
பிற மாநில விதிமுறைகளை ஆய்வு செய்து, தமிழ்நாட்டில் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. அரசு பெண் ஊழியர்கள் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கும் மாதவிடாய் விடுப்பு வழங்கும் படியாக விதிமுறைகள் உருவாக்கப்பட உள்ளன.
மாதவிடாய் காலத்தில் ஊதியத்துன் விடுப்பு எடுப்பதற்கான அறிக்கையைத் தாக்க செய்ய 2 வார கால அவகாசம் தேவைப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கு முன்பாக, விதிகளை வகுக்கும் சிறப்புக் குழுவில் நியமிக்கப்படும் உறுப்பினர்களின் விவரங்களை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், வேலைக்கு செல்லும் எண்ணற்ற பெண்களுக்கு உதவியாக இருக்கும்.
2. சிங்கப்பெண்கள் மேம்பாட்டுத் திட்டம்:
தமிழ்நாட்டில் சிஙகப்பெண் அதிரடிப் படைத் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பு மட்டுமின்றி, சமூகத்தில் வருமான ஆதரவையும் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ‘சிங்கப்பெண்கள் மேம்பாட்டுத் திட்டம்’ விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் படி இளம்பெண்கள் மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு தொழில் தொடங்க கடன் வழங்கப்படும். இதற்காக ரூ.7,000 கோடியை ஒதுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கூட்டுறவுத் துறை ஆய்வுக் கூட்டத்தின் போது இந்தத் தகவலை முதல்வர் விஜய் தெரிவித்தார். இதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் 5-ல் பட்ஜெட் தாக்கலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு தொடங்கப்பட உள்ள இந்த 2 திட்டங்களும், பெண்களின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் ஐயமில்லை. அடுத்த வாரம் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.