

வீட்டுக் கடனை பெண்களின் பெயரில் பெறுவது பல நன்மைகளை தருகிறது. ஆண்கள் பெயரில் கடன் பெறுவது வழக்கமாக இருந்தாலும், பெண்கள் பெயரில் எடுத்தால் 0.05% முதல் 0.1% வரை வட்டி குறைப்பு கிடைக்கிறது. பெண்களின் சிபில் ஸ்கோர் வலுவாக இருப்பதால் கடன் ஒப்புதல் எளிதாகும். மேலும் வருமான வரிச் சட்டத்தின் கீழ் வட்டி மற்றும் அசல் தொகைக்கு தனி வரிவிலக்குகளும் கிடைக்கின்றன.
வங்கியில் பலரும் வீட்டுக் கடன் வாங்கும்போது ஆண்களின் பெயரில்தான் வாங்குகின்றனர். பெண்களின் பெயரில் இந்த வீட்டுக்கடனை வாங்கினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை விளக்குகிறது இந்தப் பதிவு.
வளர்ந்து வரும் பொருளாதார உலகில் சொந்த வீடு என்பது பலருடைய கனவாகும். இந்தக் கனவை அடைய வாழ்க்கை முழுவதும் ஆண், பெண் என இருபாலரும் உழைக்கின்றனர். அதிலும் சென்னை மற்றும் பெங்களூரு போன்ற பெருநகரங்களில் சொந்தமாக வீடோ அல்லதும அபார்ட்மெண்டோ இருந்தால், அவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று சொல்வார்கள்.
ஏனெனில் வீட்டு மனைகளின் விலை அந்த அளவிற்கு ஏறிவிட்டது. மனை இருந்தால் மட்டும் போதுமா, வீடு கட்டத் தேவையான அனைத்துப் பொருள்களின் விலையும் கொரோனா காலகட்டத்தில் எகிறியது. இந்தச் சூழலில் மாதச்சம்பளத்திற்கு வேலைக்குச் செல்லும் ஒருவர் சொந்த வீடு கனவை நிறைவேற்ற வேண்டுமானால், முழுக்க முழுக்க வங்கியில் வழங்கப்படும் வீட்டுக் கடனையே நம்பியிருக்கிறார்.
பொதுவாக யாருடைய வங்கிக் கணக்கில் சம்பளம் வருகிறதோ அவர்களுக்குத்தான் வங்கிக் கடன்கள் வழங்கப்படும். இதனால்தான், ஆண்கள் தங்களுடைய பெயரில் வீட்டுக் கடன்களை வாங்குகின்றனர். இருப்பினும், 30 முதல் 35% பெண்கள் தங்கள் பெயரில் வீட்டுக் கடனை வாங்குகிறார்கள் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பெண்களின் பெயரில் வங்கிக் கடன் வாங்குவதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. இது குறித்த தகவல்கள் பலருக்கும் தெரியாத நிலையில் தான் ஆண்கள் தங்கள் பெயரிலேயே வீட்டுக் கடனை வாங்கி விடுகின்றனர்.
வட்டி விகிதம் குறையும்: பெண்களின் பெயரில் வீட்டுக் கடனை வாங்கும் போது 0.05% முதல் 0.1% வட்டி விகிதம் குறையும். இது மாதத் தவணைத் தொகையில் சிறிதளவு வித்தியாசத்தையே காட்டினாலும், நீண்ட கால கடனில் கணிசமான வட்டித்தொகையை நம்மால் சேமிக்க உதவும்.
வலுவான சிபில் ஸ்கோர்: பெண்கள் இதற்கு முன் எங்கும் கடன் வாங்காத சூழலில், இவர்களின் சிபில் ஸ்கோர் வலுவாக இருக்கும். இதனால், வீட்டுக் கடனுக்கு விரைவிலேயே ஒப்புதல் கிடைப்பது மட்டுமின்றி, கடனாக அதிகபட்ச தொகை கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
வரிவிலக்கு: பெண்களின் பெயரில் வீட்டுக் கடனை வாங்கினால், வருமான வரிச் சட்டம் 24 பிரவு-B படி, ஒரு வருடத்திற்கு ரூ.2 இலட்சம் வரையிலான வட்டிக்கு வரிவிலக்கைப் பெறலாம். மேலும், கடனுக்கான அசல் தொகையை திரும்பச் செலுத்தும்போது பிரிவு 80C படி, ரூ.1.5 இலட்சம் வரையில் வரிவிலக்கைப் பெறமுடியும்.
சலுகைகள்: குறிப்பிட்ட சில மாநிலங்களில் பெண்களின் பெயரில் வீடு அல்லது சொத்துகளை வாங்கும்போது, பத்திரப்பதிவு கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்படுகிறது.
பெண்களுக்கு பல்வேறு துறைகளில் சலுகைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், வங்கிக் கடனிலும் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனைப் புரிந்து கொண்டு, பெண்களின் பெயரில் வீட்டுக் கடனைப்பெற்று ஓரளவு வட்டியைக் குறைக்க முயற்சி செய்யுங்கள்.
உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்கள் பெயரில் வீட்டுக் கடனைப் விண்ணப்பிப்பதன் மூலம் லட்சக்கணக்கான ரூபாய் வட்டிச் செலவைக் குறைப்பதோடு, வருமான வரிச் சட்டத்தின் கீழ் அதிகபட்ச வரிச் சலுகைகளையும் பத்திரப்பதிவு தள்ளுபடிகளையும் உடனடியாகப் பெற முடியும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference: