

தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாகப் பாடுவதை அனுமதிக்க முடியாது என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கூறியுள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாகப் பாடுவது என்பது தவறான விஷயம். பாஜக ஆளும் மாநிலங்களில் அந்தந்த மாநிலப் பாடல்களே முதலில் பாடப்படுகிறது. எனவே தமிழ்த்தாய் வாழ்த்துக்குத் தான் முன்னுரிமை தர வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக பாடப்படும் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் விஸ்வநாதன் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படுவது குறித்து அமைச்சர் நிர்மல் குமார் கருத்து தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் கலையரங்கில் நடைபெற்றது.
விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தலைமை தாங்கி, மாணவ மாணவிகளுக்கு பட்டங்களையும், தங்க பதக்கங்களையும் வழங்குகினார். பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்தில் பாடப்படும் என துணைவேந்தர் அறிவித்ததைத் தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
அமைச்சர் விஸ்வநாதனுக்கு இந்த விழாவுக்கு அழைப்பு விடுத்திருந்தும் அவர் பங்கேற்கவில்லை. அதே போல் இன்று முனைவர் பட்டம் பெறவிருந்த மகேஷ் குமார் அகர்வாலும் இந்த விழாவில் பங்கேற்கவில்லை. இந்த இருவரும் விழாவை புறக்கணித்துள்ளனர். பல்கலைக்கழக விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படுவது குறித்து அமைச்சர் நிர்மல் குமார் பதிலளிக்கையில் - தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை அளிக்கப்படும். தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநர் தரப்பிலிருந்து பல வழிகாட்டுதல்களை கொடுத்து வருகிறார்கள். அது ஏற்புடையதல்ல. இங்கு தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தான் முன்னுரிமை அளிக்கப்படும். பாஜக ஆளும் மற்ற மாநிலங்களில் கூட மாநில மொழிக்கே முன்னுரிமை அளிக்கின்றனர். அதனால் தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.
அத்துடன் ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு ஏற்பட்டது. பட்டமளிப்பு விழாவில் 113 பேருக்கு மட்டுமே ஆளுநர் பட்டம் வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டதால் மாணவர்கள் மத்தியில் வாக்குவாதமும் சலசலப்பும் ஏற்பட்டது.
மாணாக்கர்கள் அதிருப்தியில் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர். மாணவர்களின் கோரிக்கையை ஆளுநர் ஏற்றதாக ஆளுநரின் செயலாளர் சஜன்சிங் சவான் அறிவித்த பின்னரே சலசலப்பு அடங்கியது.
கடந்த மே மாதம் முதல்வர் சி.ஜோசப் விஜய் அவர்களின் பதவியேற்பு விழாவின் போது தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய அரசின் புதிய சுற்றறிக்கை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டதாக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் இதர கூட்டணி கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனைத் தொடர்ந்து தவெக உள்ளிட்ட கட்சிகள், தமிழக அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதன்மையாகப் பாடுவது தான் மரபு என்றும், இனிவரும் காலங்களில் இத்தகைய நடைமுறைகள் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் உறுதியளித்துள்ளன.
மேலும் இது தொடர்பான வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டு, மாநிலத்தின் பிரத்யேக மரபுகளைப் பேண வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே தமிழ்த்தாய் வாழ்த்தை அரசு விழாக்களில் மூன்றாவது பாடலாகப் பாடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் எப்போதும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தான் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பது அரசின் கொள்கையாகும்.
அரசு விழாக்களின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் பாடுவதே தமிழ்நாட்டின் நீண்டகால மரபு. மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல்கள் அல்லது சுற்றறிக்கைகள் காரணமாக வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதத்திற்கு பின் தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவது இடத்திற்கு மாற்றுவதை ஏற்க முடியாது.
தமிழ் மக்களின் பண்பாடு மற்றும் மொழி உணர்வை வெளிப்படுத்தும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் வழங்குவதே சரியான நடைமுறை என்று தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.