

இந்தியா முழுவதும் கடந்த மே 3-ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. ஆனால் தேர்வுக்கு முன்பாகவே வினாத்தாள் கசிந்து விட்டது கண்டுபிடிக்கப்பட்டதால், இந்தத் தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) ரத்து செய்தது. இதனையடுத்து மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் வருகின்ற ஜூன் 21-ம் தேதி நீட் மறுதேர்வு நடைபெற இருக்கிறது. நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் டெலிகிராம் செயலிக்கு தொடர்பு உண்டு என மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தது. இதனால் ஜூன் 22-ம் தேதி வரை டெலிகிராம் செயலிக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தற்காலிக தடை விதித்தது.
இந்தத் தடையை எதிர்த்து டெலிகிராம் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் டெலிகிராம் செயலிக்கு, மத்திய அரசு விதித்த தற்காலிக தடை செல்லும் என டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தேஜஸ் காரியா அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
நாட்டில் பல்வேறு குற்ற சம்பவங்களுக்கு டெலிகிராம் செயலி உதவுவதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. மேலும் சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் போதை பொருள் விநியோகத்திலும் telegram செயலிக்கு முக்கிய பங்குண்டு என மத்திய அரசு நேற்று (ஜூன் 18) டெல்லி உயர்நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது. இதுதவிர டெலிகிராம் செயலி நாட்டிற்கே அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது எனவும் மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
பொது அமைதி, தேசத்தின் பாதுகாப்பு மற்றும் அமைதியான முறையில் நீட் தேர்வு நடைபெறுவதை உறுதி செய்ய டெலிகிராம் செயலிக்கான தடை அவசியம் எனவும் மத்திய அரசு வாதிட்டது. டெலிகிராம் செயலி தடைக்கு எதிரான வழக்கு விசாரணை நேற்று முழுமையாக முடிந்த நிலையில், சற்றுமுன் பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளார் நீதிபதி தேஜஸ் காரியா.
நீதிபதி அளித்த தீர்ப்பில், “டெலிகிராம் செயலுக்கு மத்திய அரசு விதித்து தடை குறைந்தபட்ச கட்டுப்பாட்டு நடவடிக்கையாகும். நீட் தேர்வில் முறைகேடுகளை தவிர்க்கவே இந்த தடையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. நீட் தேர்வு நாட்டின் மிக முக்கிய தேர்வு என்பதால், மத்திய அரசின் விதித்த தற்காலிக தடை செல்லும். மேலும் இதுவொரு தற்காலிகமான மற்றும் நியாயமான முடிவு என்பதால், இதில் தலையிட முடியாது” என தீர்ப்பளித்தார்.
நாளை மறுநாள் ஜூன் 21-ம் தேதி நீட் மறுதேர்வு மதியம் 2 மணி முதல் 5:15 மணி வரை நடைபெற இருக்கிறது. எப்போதும் 3 மணி நேரம் மட்டுமே நடைபெறும் நீட் தேர்வு, மாணவர்களின் வசதிக்காக இம்முறை 15 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
ஜூன் 22 வரை டெலிகிராம் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதற்குப் பிறகு நிலைமையை ஆய்வு செய்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும்.
டெலிகிராம் செயலி நாட்டிற்கே அச்சுறுத்தல் என மத்திய அரசு தெரிவித்திருப்பதால், இந்த செயலிக்கான தடை மேலும் நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. மேலும் நீட் தேர்வை இம்முறை அதிக கவனத்துடன் நடத்த தேசிய தேர்வு முகமை, வினாத்தாள்களை ஹெலிகாப்டர் மூலம் தேர்வு மையங்களுக்கு வநியோகம் செய்யவுள்ளது.