அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கும் உலகமே உற்று நோக்கிய ஒரு நிகழ்வு. அதிலும் அதிரடிக்கு பெயர்போனவர் டிரம்ப் என்பதால் எதிர்பார்ப்புகள் எகிறியது. இந்த பதவியேற்பு நிகழ்ச்சி பல்வேறு சாதனைகளையும் பல்வேறு பாரம்பரிய நடைமுறைகளையும் முறியடித்துள்ளது.
மிக வயதான அதிபர்: அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்க இருக்கிறார். அமெரிக்க அதிபராக பதவி ஏற்கும் மிக வயதான நபர் என்ற பெயர் அவருக்குக் கிடைத்திருக்கிறது. 2020ம் ஆண்டு ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்றபோது அவருடைய வயது 78 ஆண்டுகள் 61 நாட்களாக இருந்தது. தற்போது டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவி ஏற்கும்போது அவருடைய வயது 78 ஆண்டுகள் 220 நாட்களாக இருந்தது.
நான்கு ஆண்டுகள் இடைவெளி விட்டு அதிபர் பதவி: டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவி ஏற்றாலும் அடுத்தடுத்த தேர்தல்களில் அவர் வெற்றி பெறவில்லை. அந்த வகையில் முன்னாள் அமெரிக்க அதிபர் குரோவர் கிளீவ்லேண்டுக்கு அடுத்ததாக நான்கு ஆண்டுகள் இடைவெளி விட்டு அமெரிக்க அதிபர் பதவி வகிக்கும் நபர் டிரம்ப். குரோவர் கிளீவ்லேண்ட் அமெரிக்காவின் 22வது அதிபராகவும் 24வது அதிபராகவும் இருந்தார். டிரம்ப் 45வது அதிபராகவும் 47வது அதிபராகவும் பொறுப்பேற்கிறார்.
இரண்டு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு, ஒரு வழக்கில் தண்டனை பெற்ற ஒருவர் அமெரிக்க ஜனாதிபதியாவது இதுவே முதல் முறை. இப்படி ஜனாதிபதி ஆனவர் டிரம்ப் மட்டுமே.
உள்ளரங்கில் நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சி: கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் முதன்முறையாக அதிபர் பதவி ஏற்பு விழா உள்ளரங்கில் நடைபெறுகிறது. அமெரிக்காவில் தற்போது கடுமையான பனிக்காலம் என்பதால் டொனால்ட் டிரம்ப் பதவியேற்கும் நிகழ்ச்சி ரோட்டுண்டா உள்ளரங்கத்தில் நடைபெறுகிறது. இதற்கு முன்பு 1985ம் ஆண்டு ரொனால்ட் ரீகன் அதிபராக பதவியேற்ற நிகழ்வு உள்ளரங்கில் நடைபெற்றது.
அமெரிக்க ஜனாதிபதிகள் பொதுவாக பதவியேற்பின்போது பைபிளை வைத்து அதன் மீது உறுதிமொழி எடுத்துக்கொள்வது வழக்கம். இந்த முறை டிரம்ப் இரண்டு பைபிள்களை வைத்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார். ஒன்று அவரது வீட்டில் இருந்து கொண்டு வந்தது, மற்றொன்று 1861ம் ஆண்டு ஆபிரகாம் லிங்கன் பயன்படுத்திய பைபிள். இப்படி நடப்பது இதுவே முதல் முறை.
பதவியேற்புக்கு முந்தைய பேரணி: அமெரிக்க அதிபராக பதவி ஏற்பதற்கு முன்னர் தன்னுடைய ஆதரவாளர்கள் மத்தியில் வெற்றிப் பேரணி நடத்திய முதல் அதிபர் என்ற பெருமை டிரம்புக்கு கிடைத்திருக்கிறது. பொதுவாக, அமெரிக்க அதிபராக பதவி ஏற்கும் நபர்கள் பதவியேற்ற பிறகு பேசக்கூடிய உரை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும். எனவே, அதுவரை அவர்கள் மௌனம் காப்பார்கள். ஆனால், அந்த பாரம்பரியத்தை உடைத்து பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு முன்னதாகவே டிரம்ப் ஆதரவாளர்கள் மத்தியில் பிரம்மாண்ட பேரணி நடத்தி இருக்கிறார்.
பொதுவாக, பாதுகாப்பு காரணங்கள் கருதி அமெரிக்க அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சியில் வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்க மாட்டார்கள். ஆனால், அந்த பாரம்பரியத்தை உடைத்திருக்கும் டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களை அழைத்து இருக்கிறார். அதேபோல, இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் சீனா சார்பாக துணை அதிபர் கலந்து கொண்டிருக்கிறார். அமெரிக்க அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சியில் முதன் முறையாக சீனாவில் உயர் பதவியில் இருக்கும் நபர் ஒருவர் கலந்து கொள்வது இதுவே முதன் முறையாகும். இவர்களோடு முதல் முறையாக அர்ஜென்டினா ஜனாதிபதியும், இத்தாலி நாட்டின் பிரதமரும் கலந்து கொண்டுள்ளனர். 248 ஆண்டு அமெரிக்க வரலாற்றில் இப்படி நடந்தது இதுவே முதல் முறை.
அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக ஜே.டி.வேன்ஸ் எனும் 40 வயது இளைய தலைமுறையை சேர்ந்தவர் துணை ஜனாதிபதியாக பதவியேற்றார். இவர் இந்திய மருமகன். ஆம், இந்திய வம்சாவளி பெண் உஷாவேன்ஸ் என்பவர் இவரது மனைவி. இளைய தலைமுறைக்கு துணை ஜனாதிபதி வாய்ப்பு வழங்கி அசத்தியுள்ளார் டிரம்ப்.