

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன், கடந்த இரண்டு மாதங்களாக திரைக்கு வராமல் இருக்கிறது. தற்போது வரை சென்சார் சான்றிதழ் கிடைக்காத சூழலில், கடந்த மார்ச் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மும்பையில் ஜனநாயகன் திரைப்படம் மறு தணிக்கை செய்யப்பட்டது. இந்த தணிக்கையில் தமிழக அதிகாரிகள் உள்பட 10 பேர் படத்தைப் பார்த்தனர்.
ஜனநாயகன் திரைப்படத்தில் அரசியல் சம்பந்தமான காட்சிகளும், வசனங்களும் இடம் பெற்றிருப்பதால் இந்தப் படத்தை தேர்தல் ஆணையம் பார்க்க வேண்டும் என சென்சார் போர்டு பரிந்துரை செய்தது. இந்நிலையில் மீண்டும் சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் ஜனநாயகன் திரைப்படத்திற்கு புதிய சிக்கல் உருவானது.
இதனைத் தொடர்ந்து தற்போது தமிழக தேர்தல் அதிகாரியான அர்ச்சனா பட்நாயக், ஜனநாயகன் படத்தின் சென்சார் விவகாரம் குறித்து முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கும் சூழலில், விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் படத்திற்கு தேர்தல் ஆணையம் பச்சைக்கொடி காட்டுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இருப்பினும் இது தொடர்பான விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்கும் என தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “அரசியல் கட்சியின் தலைவரும், வேட்பாளருமான ஒருவரின் திரைப்படம் தேர்தல் நேரத்தில் திரைக்கு வர இருப்பது, வரலாற்றில் இதுவே முதல் முறை. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் இந்த சூழலில், ஒரு வேட்பாளரின் திரைப்படத்தை வெளியிடலாமா என்று கேட்கிறீர்கள். இதுவொரு நல்ல கேள்வி தான்.
இருப்பினும் இது போன்ற ஒரு சூழல் இதற்கு முன் நடந்ததில்லை என்பதால், இந்த விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் கேட்டு தான் முடிவு எடுக்கப்படும்” என அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஜனநாயகன் திரைப்படம் கடந்த இரண்டு மாதங்களாக வெளியிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் இந்தப் படத்தை தேர்தலுக்கு முன்பாக வெளியிட ஒப்புதல் அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இருப்பினும் தேர்தலுக்குப் பிறகுதான் படத்தை வெளியிடப் போவதாக படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், இதற்கு ஏன் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் வேண்டும் எனவும் படக்குழு சார்பில் கேள்வி கேட்கப்பட்டது.
இருப்பினும் சென்சார் போர்டு தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்ததன் காரணமாக, இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவுதான் இறுதியாக இருக்கும் என்று தெரிகிறது.
இந்நிலையில் படம் கிட்டத்தட்ட தேர்தலுக்குப் பிறகே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோடை விடுமுறையை ஒட்டி, ஜனநாயகன் திரைப்படம் மே அல்லது ஜூன் மாதத்தில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது.