

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நாளை (செப்டம்பர் 9) கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) பங்கேற்காது என அக்கட்சியின் முன்னாள் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தவெக ஆட்சி அமைய இடதுசாரிகளும் ஆதரவு அளித்த நிலையில், அமைச்சரவையில் சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சிகளுக்கு தவெக இடம் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கூட்டணியிலேயே இல்லாத போது நாங்கள் ஏன் தவெக நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என சிபிஎம் சார்பில் தெரவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணி கட்சிக் கூட்டத்திற்கு இடதுசாரிகளுக்கும் தவெக அழைப்பு விடுத்த நிலையில், சற்றுமுன் தங்களது முடிவை அறிவித்தது சிபிஎம்.
நேற்று சட்டசபையில் திமுகவை கடுமையாக விமர்சித்த முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு, சிபிஎம் கண்டனம் தெரிவித்த நிலையில், நாளைய கூட்டத்தில் பங்கேற்காதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், “சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த போது ஆட்சி அமைப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் தமிழக வெற்றிக் கழகத்திற்கே இருந்தது. அப்போதைய சூழ்நிலையில் குடியரசுத் தலைவர் அமைந்து விடக்கூடாது என்பதை வலியுறுத்தியே நாங்கள் தவெக-வுக்கு ஆதரவு அளித்தோம்.
நாளை சென்னையில் நடைபெறும் கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது. ஏற்கனவே தவெக நடத்திய கூட்டத்தில் நாங்கள் பங்கேற்கவில்லை; நாளையும் பங்கேற்க மாட்டோம்.
தற்போது இடதுசாரிகள் ஒன்றிணைந்து செயல்பட உள்ளோம். அடுத்த மாதம் இடதுசாரிகள் சார்பில் மாபெரும் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். நாங்கள் தவெக மற்றும் திமுக என எந்தக் கூட்டணியிலும் இல்லை. தேர்தல் வரும்போது அந்த நேர சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகளை எடுப்போம்” என அவர் தெரிவித்தார்.