

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே போர் மூண்டுள்ள நிலையில், இருபுறமும் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில், ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதலால், ஈரானில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்யில் 80% இந்தப் பகுதி வழியே தான் வருகிறது.
ஹார்முஸ் ஜலசந்தி, உலகின் முக்கியமான கச்சா எண்ணெய் ஏற்றுமதி வழித்தடமாகவும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் அதிகாரப்பூர்வமாக மூடியுள்ளது.
இதனால் இனி வரும் நாட்களில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 USD ஆக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரும் எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிப்பது எங்களுடைய கடமை என அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முதல் அமெரிக்கா இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடுமையான போர் நடந்து வருகிறது. இந்நிலையில் இது உலக பொருளாதார சந்தையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. மேலும் கச்சா எண்ணெய் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால், பெட்ரோல் டீசல் விலை உயர அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்தியாவிடம் அடுத்த 25 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் இருப்பதால், தற்போதைக்கு பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தும் எண்ணம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரும் எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிப்போம் என அதிபர் டிரம்ப் உறுதி அளித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “உலக நாடுகளுக்கு எரிசக்தி விநியோகம் தடையின்றி கிடைப்பதை அமெரிக்கா உறுதி செய்யும். ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரும் அனைத்து எண்ணெய் கப்பல்களுக்கும் அமெரிக்க கடற்படை பாதுகாப்பு அளிக்கும்.
ஈரான் மீது தாக்குதல் தொடுத்ததற்காக ஸ்பெயின் இராணுவ தளங்களை அமெரிக்கா பயன்படுத்த அந்நாடு தடை விதித்துள்ளதால், ஸ்பெயின் உடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் முற்றிலுமாக நிறுத்துவோம்” என டிரம்ப் தெரிவித்துள்ளார்
ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதை அடுத்து, இந்தியாவிற்கு கச்சா எண்ணெயை மீண்டும் விநியோகம் செய்யத் தயார் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்யா உடன் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த இந்தியாவிற்கு, அமெரிக்கா கடந்த ஆண்டில் வரிவிதிப்பை உயர்த்தியது. இதில் தற்போது சுமுகமான முடிவு எட்டப்பட்டு, இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியதை அடுத்து வரி விகிதம் குறைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போதைய போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட அதிக வாய்ப்புள்ளதால், இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள ரஷ்யா முயல்கிறது.
ஒருவேளை கச்சா எண்ணெய் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டால், ரஷ்யாவின் இந்த ஆஃபரை இந்தியா ஏற்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.