

நாட்டில் விலைவாசி உயர்வு என்பது பெரும்பாலும் நடுத்தர மற்றும் ஏழ்மை நிலை மக்களையே அதிகம் பாதிக்கிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்து வருகிறது. அதேபோல் சமீபத்தில் கிடைத்த தகவல்களின்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் உயர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் ஸ்மார்ட்போன்களின் விலையும் உயரப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த இன்றைய காலகட்டத்தில் பெருமபாலான மக்களிடம் ஸ்மார்ட்போன் இருக்கிறது. பெரும்பாலும் நடுத்தர மற்றும் ஆரம்ப விலை கொண்ட ஸ்மார்ட்போன்களையே அதிகம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வருகின்ற ஆங்கிலப் புத்தாண்டு முதல் ஸ்மார்ட்போன்களின் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்ற தகவல் பரவி வருகிறது. இந்த விலை உயர்வுக்கும் ஏஐ தொழில்நுட்பம் தான் மறைமுக காரணமாக இருக்கிறது.
இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் நவீன வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கேற்ப ஏஐ தொழில்நுட்பமும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் வந்துவிட்டது.
இதன் காரணமாக அதிக சேமிப்புத் திறன் கொண்ட ஏஐ ‘சிப்’களை தயாரிக்க பல நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றன. இதனால் ஆரம்ப மற்றும் நடுத்தர ஸ்மார்ட்போன்களுக்குத் தேவையான சிப் தயாரிப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் விநியோக சிக்கல் காரணமாக சேமிப்புத் திறன் சிப்களின் விலை உயர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக அடுத்தாண்டு முதல் ஸ்மார்ட்போன்களின் விலை கணிசமாக உயரும் என டிரெண்டுபோர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிப் தயாரிப்பாளர்கள் பலரும், அதிக சேமிப்புத் திறன் கொண்ட ஏஐ சிப் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் தொடக்க நிலை மற்றும் நடுத்தர ஸ்மார்ட்போன்களுக்குத் தேவையான என்.ஏ.என்.டி., பிளாஷ் மற்றும் எல்.பி.டி.டி.ஆர்.4 எக்ஸ் உள்ளிட்ட சிப்களின் தயாரிப்பு குறைந்துள்ளது. இதனால் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் முன்கூட்டியே சிப்களை வாங்க தொடங்கியுள்ளன. இதன் காரணமாக நடப்பாண்டின் நான்காவது காலாண்டில் சிப் விலை 10 சதவிகிதத்திற்கும் மேல் உயர வாய்ப்புள்ளது.
சிப் விலை உயர்வால், ஸ்மார்ட்போனில் சில முக்கிய அம்சங்களை குறைக்க நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. சில நிறுவனங்கள் விலை உயர்வை சமாளிக்க அம்சங்களை குறைக்காமல், ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேமிப்புத் திறன் கொண்ட சிப் விலை உயர்வை சமாளிக்க கேமரா மற்றும் டிஸ்ப்ளே உள்ளிட்டவற்றை குறைந்த தரத்தில் வழங்க ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பரிசீலனை செய்து வருகின்றன. விலை உயர்வை சமாளிக்க முடியாத பட்சத்தில் மட்டுமே, வருகின்ற ஜனவரி முதல் ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்த முடிவெடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.