

உலகளாவிய வர்த்தகம் மற்றும் பங்குச்சந்தை காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் தங்கமும், வெள்ளியும் பல மடங்கு உயர்ந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் அதிகபட்சமாக ஒரு லட்சத்தையும், ஒரு கிராம் வெள்ளியின் விலை ₹250-ஐ தாண்டியுள்ளது.
இந்நிலையில் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்தவர்கள் பல மடங்கு லாபத்தை ஈட்டியுள்ளனர். 2026 ஆம் ஆண்டிலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தங்கம் மற்றும் வெள்ளியை காட்டிலும் இன்னும் பல மடங்கு விலை உயர்வை சந்தித்து இருக்கிறது பிளாட்டினம் என்னும் உலோகம். பெரும்பாலான முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்களின் கவனம் தங்கம் மற்றும் வெள்ளியின் மீது இருக்கிறது. ஆனால் பிளாட்டினத்தின் விலையும் கடந்த வருடத்தில் பல மடங்கு ஏறி இருப்பதை பலரும் கவனிக்கத் தவறி விட்டனர்.
தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்வதை காட்டிலும் 2026 ஆம் ஆண்டில் பிளாட்டினத்தில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் பிளாட்டினத்தில் மட்டுமே முழு முதலீட்டையும் தொடங்க வேண்டும் என்றில்லை. தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் ஆகிய மூன்று உலோகங்களிலும் முதலீட்டுப் பணத்தை பிரித்து முதலீடு செய்வது நல்ல யுக்தியாக இருக்கும் எனவும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு அவுன்ஸ் பிளாட்டினத்தின் விலை 1,000 டாலருக்கும் குறைவாகவே இருந்தது. ஆனால் தற்போது இதன் விலை 2,300 டாலரையும் கடந்து உயர்ந்து வருகிறது. 1987 ஆம் ஆண்டுக்குப் பிறகு பொருளாதாரச் சந்தையில் பிளாட்டினத்தின் விலை உயர்வு, கடந்த 2025 இல் தான் அதிகபட்சம் என தகவல்கள் கூறுகின்றன. 2025 இல் மட்டும் பிளாட்டினம் 170%-க்கும் மேல் உயர்ந்துள்ளது.
2026 ஆம் ஆண்டிலும் பிளாட்டினத்தின் விலை மேலும் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்வதைக் காட்டிலும், பிளாட்டினத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக அளவில் தென்னாப்பிரிக்காவில் தான் பிளாட்டினம் உற்பத்தி அதிக அளவில் நடந்து வருகிறது. தற்போது பிளாட்டினம் உற்பத்தி செய்வதில் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வருவதால், சந்தையில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆகையால் தான் பிளாட்டினத்தின் விலை கடந்த ஆண்டிலிருந்து ஏறுமுகத்திலேயே தொடர்கிறது. இதன் காரணமாக ஒரு சில முதலீட்டாளர்களின் பார்வை பிளாட்டினத்தின் மீது திரும்பி உள்ளது.
பெருமுதலீட்டாளர்கள் பிளாட்டினத்தை உலோகமாகவும், ETF ஆகவும் வாங்கி முதலீட்டை அதிகப்படுத்தி வருகின்றனர். வெள்ளியைப் போலவே நகை மட்டுமின்றி, தொழில் துறையிலும் பிளாட்டினம் பயன்படுத்தப்பட்டு வருவதால், இதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
2026-ல் எதில் முதலீடு செய்யலாம் என்று சிந்திப்பவர்கள், நிபுணர்களின் கூற்றுப்படி பிளாட்டினத்தையும் ஒரு முதலீட்டு வாய்ப்பாக கருதலாம்.
இன்றைய நிலவரப்படி 1 கிராம் பிளாட்டினம் ரூ.5,975-க்கும், 10 கிராம் பிளாட்டினம் ரூ.5,9750-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.