நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் இன்று கட்சியின் உறுதிமொழியை ஏற்றனர்.
முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், அரசியலில் முழு வீச்சாக இறங்கி, தனது கட்சிக்கும் தமிழக வெற்றிக்கழகம் என பெயரிட்டு அறிவித்தார். இதன் பிறகு கட்சியை வலுப்படுத்தும் பணியில் தீவிரமாக இறங்கி வருகிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தல் தனது இலக்கு இல்லை என்றும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலே இலக்கு எனவும் ஏற்கனவே விஜய் அறிவித்திருந்தார். அதன் படி தமிழக வெற்றிக்கழகம் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது.
இன்னும் கட்சி கொடி வெளியாகாத நிலையில், கட்சி செயலாளர்கள் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழகம் மட்டும்மல்லாது கேரளாவிலும் தனது கட்சியைப் பலப்படுத்த அங்கிருக்கும் நிர்வாகிகளுடனும் நடிகர் விஜய் கலந்துரையாடி வருகிறார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. தொடர்ந்து கூட்டத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகளும் உறுதி மொழி ஏற்றனர். நாட்டின் விடுதலைக்காகவும் மக்களின் உரிமைக்காகவும் தீரத்துடன் போராடிய வீரர்களின் தியாகத்தைப் போற்றுவேன். மொழிப்போர் தியாகிகள் இலக்கை நிறைவேற்றப் பாடுபடுவேன். மக்கள் நலச் சேவகராகப் பணியாற்றுவேன். சாதி, மதம் போன்ற வேறுபாடுகளைக் களைந்து பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையைக் கடைபிடிப்பேன் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வசனங்கள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. பாஜகவை எதிர்க்கிறாரா விஜய் எனவும் பேச்சுக்கள் எழுந்து வருகிறது.