

தமிழ்நாட்டில் ரயில் போக்குவரத்திற்கு அடுத்து, பெரும்பாலான மக்கள் பேருந்து போக்குவரத்தையே அதிகம் பயன்படுத்துகின்றனர். பயணத்தின் போது பொதுமக்கள் எவ்வித சிரமமும், தொந்தரவும் இன்றி பயணம் செய்வதை உறுதி செய்ய தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி இனி பேருந்து பயணத்தின் போது, பயணிகள் யாரும் சத்தமாக பேசக் கூடாது. அதேபோல் ஹெட்போன் அலலது இயர் பட்ஸ் இன்றி பாடல் கேட்கக் கூடாது. பயணங்களில் தனிநபர்களின் அதிக சத்தத்தால், மற்ற பயணிகளுக்கு தொந்தரவாக இருக்கிறது. இதன் காரணமாக இன்று முதல் இந்த உத்தரவு அமல்படுத்தப்படுவதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
பயணிகள் அனைவரும் மற்ற பயணிகளுக்கு தொந்தரவு தரும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரயில் மற்றும் பேருந்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து பயணத்தின் போது நிலவும் அதிகப்படியான இரைச்சலைக் கட்டுப்படுத்த பல மாநிலங்களில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ரயில் பயணத்தை இனிதாக்க பயணிகள் சத்தமாக பேசுவதும், சத்தமாக பாடல் கேட்பதும் தடை செய்யப்பட்டது. அதையும் மீறி பயணிகள் யாரேனும் சத்தமாக பேசி, மற்ற பயணிகளுக்கு இடையூறை ஏற்படுத்தினால், ரயில்வே துறை அதிகாரிகளிடம் புகார் செய்யலாம்.
இந்நிலையில் பயணத்தின் போது அமைதியான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது போக்குவரத்து துறையின் இன்றியமையாத பணி. இதன்படி தமிழ்நாடு போக்குவரத்து துறையிலும் இந்தப் புதிய முறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
தனிப்பட்ட முறையில் பயணத்தின் போது பாடல்கள், ரீல்ஸ் மற்றும் வீடியோக்களை பார்க்க விரும்பும் பயணிகள் ஹெட்போன் அல்லது இயர் பட்ஸை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். மொபைல்போனில் ஸ்பீக்கரை ஆன் செய்து பேசுவது அல்லது சத்தமான குரலில் பேசுவதை பயணிகள் தவிர்க்க வேண்டும்.
புகார் அளிக்கலாம்:
பேருந்துகளில் பயணத்தின் போது விதிமுறைகளை மீறி யாரேனும் சத்தமாக பேசினாலோ அல்லது பாடல்கள் கேட்டாலோ, பயணிகள் நடத்துநர் அல்லது ஓட்டுநரிடம் புகார் அளிக்கலாம்.
விழிப்புணர்வு நடவடிக்கை:
அரசுப் பேருந்துகளில் அமைதியான பயணத்திற்கு விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டுவது மற்றும் அவ்வப்போது ஒலிப்பெருக்கி மூலம் பயணிகளுக்கு அறிவிப்பு செய்வது போன்ற விழிப்புணர்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும் இந்தப் புதிய நடைமுறையைப் பற்றி ஓட்டுநரும், நடத்துநரும் பயணிகளிடம் எடுத்துக் கூற வேண்டும் என போக்குவரத்து துறை அறிவுரைத்துள்ளது.
பேருந்துகளில் நீண்ட தூரம் பயணம் செய்யும் மூத்த குடிமக்கள், மாணவர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் மத்தியில் இந்த புதிய விதிமுறை நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநகரப் பேருந்துகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் தான் அதிக கூட்ட நெரிசல் ஏற்படும். இம்மாதிரியான நேரத்தில் பயணிகள் அசௌகரியத்தை உணர்வார்கள். இதற்காக காலை மற்றும் மாலையில் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க போக்குவரத்து துறை திட்டமிட்டு வருகிறது.
இந்நிலையில் பேருந்து பயணத்தை மக்கள் விரும்பம் வகையில் மாற்றுவதற்கு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆகையால் போக்குவரத்து துறையின் விதிகளை பொதுமக்கள் தவறாமல் கடைபிடித்து, ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.