

கோடிக்கணக்கான மக்களின் துயர் துடைத்து வந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் இலவச மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவ காப்பீட்டுத் தொகை ஆண்டொன்றுக்கு, தற்போதுள்ள ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ. 25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மருத்துவம் என்பது சலுகை அல்ல; ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை. ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்றுவதில் தாமதமாகும் ஒவ்வொரு நொடியும் மிக கொடியது, மருத்துவத்தைத் தேடிவரும் மக்களின் பாதையில் இருக்கும் தடைகளான வறுமை, மருத்துவர் பற்றாக்குறை, மருந்துகளின் விலை, மருத்துவ விழிப்புணர்வு இல்லாமை, காத்திருப்பு, அவசரகால வசதியின்மை போன்றவற்றை படிப்படியாக அகற்றி, ஏழை–பணக்காரர், கிராமம்–நகரம் என்ற பாகுபாடின்றி, ஒவ்வொருவருக்கும் தரமான மற்றும் எளிதான மருத்துவ சேவை கிடைக்கச் செய்வதை முதன்மையான நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது தமிழக அரசு.
அந்த வகையில் தமிழ்நாட்டின் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (CMCHIS) (முதலமைச்சர் திட்டம்) என்பது தகுதியான குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ. 5 லட்சம் வரை எவ்வித பணமும் இல்லாமல் இலவசமாக உயர்தர மருத்துவச் சிகிச்சைகளை வழங்கும் ஒரு முக்கிய அரசுத் திட்டமாகும்.
இந்நிலையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் இலவச மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவ காப்பீட்டுத் தொகை ஆண்டொன்றுக்கு, தற்போதுள்ள ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ. 25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அரசு மற்றும் அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக உயர்தர சிகிச்சைகளைப் பெறலாம். நூற்றுக்கணக்கான உயர் மருத்துவச் சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் மற்றும் பின்தொடர்தல் சிகிச்சைகள் இதில் அடங்கும்.
பொதுமக்கள் அரசு மற்றும் இத்திட்டத்தில் பட்டியலிடப்பட்ட தகுதியான தனியார் மருத்துவமனைகளில் உள்ள காப்பீட்டுத் திட்டப் பிரிவை (CMCHIS Helpdesk) அணுகி, உங்களது குடும்ப அட்டை மற்றும் அடையாள ஆவணங்களைக் காண்பித்துப் பணமில்லா (Cashless) சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்நிலையில் ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ. 25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சலுகையை பெறுவதற்கான உச்ச வருமானம் எவ்வளவு, இந்த திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
ரூ. 5 லட்சம் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்குப் பின்பற்றப்பட்ட அதே வருமான உச்சவரம்புதான், தற்போது ரூ. 25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ள திட்டத்திற்கும் தொடரும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
தற்போது ஒரு நபருக்கு ரூ.800 முதல் 900 வரை பிரிமீயம் செலுத்தப்படுகிறது. ஆனால் தற்போது ரூ.25 லட்சமாக மருத்துவ காப்பீடு உயர்த்தப்பட்டுள்ளதால் பிரிமீயம் தொகை 5 மடங்காக ஆகிவிடுமா? என்ற மக்களின் சந்தேகம் அர்த்தமற்றது. அதாவது இன்சூரன்ஸ் திட்டத்தை பொறுத்தமட்டில், அதுபோன்று இன்சூரன்ஸ் தொகை உயரும் போது பிரிமீயம் தொகை அதே மடங்கு உயராது.
இன்சூரன்ஸ் கிளைம் (Insurance Claim) ரூ.25 லட்சமாக இருந்தால் கூட அந்த தொகைக்கு கிளைம் செய்கிறவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என்பதால் பிரிமீயம் தொகை 5 மடங்கெல்லாம் உயராது. எனவே யாரும் அச்சமடைய வேண்டாம்.
மேலும் இத்திட்டத்துக்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என்பதை கணக்கில் கொண்டு தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். ஏற்கனவே இருந்து வரும் மருத்துவ காப்பீட்டு திட்டம் வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.
எனவே ஜனவரி மாதத்தில் புதிய டெண்டர் கோரும் போது பிரிமீயம் தொகை எவ்வளவு வரும் என்பது தெரியவரும் என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். மேலும் இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் மற்றும் புதிய நடைமுறைகள் அரசு அறிவிப்பின்படி படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அமைச்சரின் இந்த பதில் மூலம் ரூ.25 லட்சம் மருத்துவ காப்பீடு திட்டம் ஜனவரி மாதத்திற்கு பின்பு அமலுக்கு வரும் என தெரிய வந்துள்ளது.