

தமிழகத்தில் 3-வது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை 12 வாரங்களில் இருந்து 365 நாள்களாக உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
மகப்பேறு என்பது ஒரு பெண்ணின் வாழ்நாளில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மற்றும் உணர்வு ரீதியாகவும் மிக முக்கியமான, மாற்றங்கள் நிறைந்த ஒரு உன்னதமான காலகட்டமாகும். கர்ப்பம் மற்றும் பிரசவக் காலத்தில் ஒரு பெண்ணின் உடலில் ஹார்மோன் மாற்றங்கள், உடல் சோர்வு மற்றும் மன ரீதியான அழுத்தங்கள் ஏற்படுவது இயல்பானது. இந்த காலகட்டத்தில் தாய்க்கும் குழந்தைக்கும் தேவையான ஓய்வு, மருத்துவப் பராமரிப்பு மற்றும் பரஸ்பர பிணைப்பை (Bonding) உருவாக்க மகப்பேறு விடுப்பு (Maternity Leave) என்பது ஒரு சலுகையாக இல்லாமல், பெண்களின் அடிப்படை உரிமையாக வழங்கப்படுகிறது.
இந்தியாவில் மகப்பேறு நலச் சட்டம் (Maternity Benefit Act) மூலம் பணிபுரியும் பெண்களுக்கு பல்வேறு உரிமைகளும் விடுப்புகளும் சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன.
அந்தவகையில் தமிழக அரசு பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு முதலில் 90 நாட்களாக (3 மாதங்கள்) மட்டுமே இருந்தது. அதுவே 2011-ல் 6 மாதங்களாகவும், 2016-ல் 9 மாதங்களாகவும் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து 2021ஆம் ஆண்டு முதல், இரண்டு குழந்தைகளுக்கு ஒரு வருடமாக (365 நாட்கள்) முழு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அதேவேளை, இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ள பெண்களுக்கு மூன்றாவது குழந்தைக்கான மகப்பேறு விடுப்பு 12 வாரங்களாக (84 நாட்கள்) மட்டுமே இருந்து வந்தது. இதனை 365 நாட்களாக உயர்த்த வேண்டும் என்ற பல நாட்களாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து, தற்போது இந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டு, தமிழக சட்டமன்றத்தில் மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கையின்போது, மூன்றாவது குழந்தைக்கான மகப்பேறு விடுப்பையும் 12 வாரங்களில் இருந்து 365 நாட்களாக நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 3-வது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை 12 வாரங்களில் இருந்து 365 (ஓராண்டு) நாள்களாக உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
இதன்படி, நிரந்தர மற்றும் தற்காலிக பணியில் உள்ள திருமணமான பெண் அரசு ஊழியர்கள் இந்தச் சலுகையைப் பெறலாம். 365 நாட்கள் விடுப்புக் காலத்திலும் முழு ஊதியம் வழங்கப்படும். மேலும், இந்த விடுப்பை பிரசவத்திற்கு முன்பாகவோ அல்லது பிரசவத்திற்குப் பிறகோ பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் தாய்மார்கள் உடல்நலத்தை மீட்டெடுத்து, குழந்தையை சிறப்பாக பராமரிக்க கூடுதல் அவகாசம் கிடைக்கும்.
கடந்த ஆகஸ்ட் 18-ம்தேதி சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் டி. சரத்குமார் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து, இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இரண்டுக்கும் குறைவான குழந்தைகளை கொண்டுள்ள அரசு பெண் ஊழியர்களுக்கு, 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 3-வது குழந்தையை பெற்றெடுக்கும் அரசு பெண் ஊழியர்களுக்கும் ஓராண்டு ஊதித்துடன் விடுப்பு வழங்கப்படுவதாக அறிவிப்பட்டுள்ளது பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ்நாட்டின் பிறப்பு விகிதம் (Total Fertility Rate) 1.4-க்கு கீழ் குறைந்து வருவதை எதிர்கொள்ளவும், தாய்-சேய் நலனைப் பேணவும் இந்தச் சலுகை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.