

தனியார் கடன் நிறுவனம் (Private Credit Firm) என்பது வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களைக் குறிக்கும், அவை நிறுவனங்கள் அல்லது தனிநபர்களுக்கு வங்கிகளைப் போலன்றி, நேரடியாக நிதி கடன்களை வழங்குகின்றன; இந்த நிறுவனங்கள் தனிநபர் கடன்கள் முதல் பெரிய கார்ப்பரேட் கடன்கள் வரை பல்வேறு வடிவங்களில் நிதியுதவி அளிக்கின்றன.
கடன் கொடுக்கும் தனியார் நிறுவனங்கள் கொடுத்த கடன் தொகையை வசூலிக்க அதிகளவிலான அடாவடி நடவடிக்கைகளையும், கந்து வட்டி, அத்துமீறல்களிலும் ஈடுபடுகின்றன. இதனால் கடன் வாங்கிய மக்கள் அதிகளவு பாதிக்கப்படுவதுடன், தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடந்தேரி வருகின்றன. மேலும் கடன் நிறுவனங்களில் அத்துமீறல்களை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் தனியார் கடன் வழங்கும் நிறுவனங்கள் கடன் வாங்கியர்கள் மீது மேற்கொள்ளும் அடாவடி வசூல், வட்டி சுரண்டல், பொதுமக்கள் மீதான அச்சுறுத்தல், மிரட்டல் போன்ற அத்துமீறல்களை முற்றிலும் தடுத்து நிறுத்தும் வகையில் ஏற்கனவே புதிய சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ள நிலையில் தற்போது அந்த சட்டத்தின் அடிப்படையில் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
அந்த சட்டத்தின்படி ‘தமிழ்நாடு கடன் வழங்கும் நிறுவனங்கள் விதிகள் 2025’ என்ற பெயரில், தனியார் கடன் நிறுவனங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், கடன் வாங்கியர்கள் மீது எதை செய்யக்கூடாது என்பதற்கான தெளிவான சட்ட ரீதியான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு கடன் வழங்கும் நிறுவனங்கள் விதிகள் 2025
* தமிழகத்தில் இனிமேல் எந்த தனிநபர் அல்லது நிறுவனம் கடன் வழங்குவதாக இருந்தாலும் கட்டாயமாக அரசின் ஆன்லைன் ‘போர்டலில்’ ரூ.10,000 ரூபாய் கட்டணம் செலுத்தி பதிவு செய்திருக்க வேண்டும்.
* நிறுவனத்தின் பெயர், முகவரி, அரசின் அனுமதி ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம்.
* அதேசமயம் கடன் வழங்கும் நிறுவனங்கள் கொடுக்கும் தகவல்கள் தவறாக இருந்தால் அந்த நிறுவனத்தின் பதிவு உடனடியாக ரத்து செய்யப்படும்.
* இந்த விண்ணப்பம் பதிவு செய்யப்பட்ட 60 நாட்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
* கடன் வழங்கும் நிறுவனம் வீட்டுக்குடும்ப தேவைக்காக வழங்கும் ரூ.4 லட்சம் வரையிலான கடன்களுக்கும், சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு 10 லட்சம் வரையிலான கடன்களுக்கும் ஜாமீன் அல்லது அடமானம் கேட்க கூடாது.
* கடன் பெறும் நபர் முழுகடனையும் திருப்பி செலுத்திய 30 நாட்களுக்குள் நிறுவனம் வைத்திருக்கும் அந்த நபரின் ஆவணங்கள் திருப்பித் தர வேண்டும்.
* கடன் நிறுவனங்களின் தவறான வசூல் நடவடிக்கைகள், மிரட்டல், மன உலைச்சல் போன்றவற்றை கண்காணிக்க புகார் தீர்க்கும் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பாயத்திற்கு வரும் புகார்கள் மீது இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தி 60 நாட்களுக்குள் தீர்வு வழங்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் போலீஸ் விசாரணைக்கு பரிந்துரை செய்யும்.
* இந்த கடன் வழங்கும் நிறுவனங்கள் ஆண்டுதோறும் செப்டம்பர் 30-ந்தேதிக்கு ஆண்டு அறிக்கையை, அதாவது எவ்வளவு கடன்கள் வழங்கப்பட்டது, வசூலானது எவ்வளவு, வட்டி வீதங்கள், வசூல் நடைமுறைகள் என அனைத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தமிழக அரசின் இந்த புதிய விதிகள் மூலம் பொதுமக்கள் மீது தனியார் கடன் நிறுவனங்கள் நடக்கும் அடாவடி வசூல், சட்ட விரோத அச்சுறுத்தல், கூடுதல் வட்டி, அடமானம் சுரண்டுதல் ஆகியவை முற்றிலும் தடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது.