

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் எண்ணற்ற பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஒப்பந்தப் பணியாளர்கள் பணியின் போது உயிரிழந்தால் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தமிழ்நாடு மின் பகிர்மான மேலாண் இயக்குநர் அறிவித்துள்ளார்.
ஒப்பந்த பணியாளர்களுக்கு நிதி உதவி அளிக்கும் வகையிலும், மனிதாபிமான அடிப்படையிலும் இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் தமிழ்நாடு மின் பகிர்மானத் துறையில் களப் பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் தங்களின் பணிப் பாதுகாப்பு உரிமைகள் மற்றும் எதிர்பாரா நேரத்தில் விபத்து நேரிடும் போது அரசு விதிகளின் படி பெறக் கூடிய முழுமையான இழப்பீட்டுப் பலன்களையும் பெற முடியும்.
* மின் துறையின் அறிவிப்பின்படி பணியின் போது உயிரிழக்கும் ஒப்பந்தப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 10 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.
* பணியின் போது எதிர்பாராமல் விபத்து ஏற்பட்டு 2 கைகள் அல்லது 2 கால்கள் அல்லது 2 கண்களை இழக்கும் ஒப்பந்தப் பணியாளருக்கு ரூபாய் 3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
* பணியின் போது எதிர்பாராமல் விபத்து ஏற்பட்டு 1 கை அல்லது 1 கால் அல்லது 1 கண்ணை இழக்கும் ஒப்பந்தப் பணியாளருக்கு ரூபாய் ஒன்றரை லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
2026 செப்டம்பர் 3-ம் தேதிக்குப் பிறகு ஏற்பட்ட விபத்துகளுக்கு இந்த இழப்பீட்டுத் தொகை அறிவிப்பு பொருந்தும் என மின்துறை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து ஆபத்தான சூழலில் மின்சாரப் பணிகளை செய்யும் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு, விபத்து காலத்தில் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிய காப்பீட்டுத் தொகை மற்றும் இழப்பீட்டு உரிமைகளை இனி சட்டபூர்வமாக உடனடியாகப் பெற இந்த அறிவிப்பு வழிவகுக்கும்.
மின்துறையின் இந்த அறிவிப்பு தமிழ்நாடு முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எதிராபார விபத்திற்கு பிறகு நிதிப் பாதுகாப்பை வழங்கும்.
மின்சாரக் கம்பங்களில் ஏறி, பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்தப் பணியாளர்கள் மற்றும் களப் பணியாளர்களுக்கு இந்த இழப்பீடு பொருந்தும்.
உயிரிழப்பு மட்டுமின்றி, தீவிரமாக காயமடைந்து நிரந்தர ஊனம் அடையும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு மருத்துவ செலவுகள் மற்றும் இழப்பீட்டுத் தொகையை ஒப்பந்ததாரர் மற்றும் மின் வாரியம் இணைந்து வழங்கிட வேண்டும் என்பது நிபந்தனை.
மின் துறையில் ஒப்பந்தப் பணியாளர்களை பணியமர்த்தும் ஒப்பந்ததாரர்கள், பணியாளர் ஈட்டுறுதி மற்றும் காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் பணியாளர்களின் பெயர்களைப் பதிவு செய்ய வேண்டியது அவசியம். இதை செய்யத் தவறினால், முதன்மை நிறுவனமாக மின் வாரியமே பணியாளருக்கு இழப்பீட்டை வழங்கி விட்டு, பிறகு ஒப்பந்ததாரரிடம் வசூலித்துக் கொள்ளும்.