

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக மின்சார பில் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக வருவதாக மின்சார நுகர்வோர்கள் தரப்பில் தொடர் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. சிலருக்கு வழக்கமாக வரும் கரண்ட் பில்லைவிட டபுள் மடங்கு அல்லது 3 மடங்கு வரை பில் அதிகரித்ததாகவும் புகார்கள் எழுந்து பரபரப்பை தந்துவிட்டன..
திடீரென இரண்டு அல்லது மூன்று மடங்கு மின் கட்டணம் அதிகமாக வந்தால், உடனே பதற்றம் அடையாமல், அதை அப்படியே செலுத்திவிடாமலும், நுகர்வோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
தவெக அரசு மீது மக்கள் வைக்கும் பொதுவான குற்றச்சாட்டுகளில் ஒன்றாக இந்த மின் கட்டண உயர்வு அமைந்துள்ளது. 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் நிலையிலும், கட்டணம் எவ்வாறு இவ்வளவு தொகையாக வருகிறது என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.
அதிகத் தொகை கொண்ட கட்டணங்களைக் கண்காணித்து, தவறான கணக்கீடுகள் ஏற்படுவதைத் தடுக்க தமிழ்நாடு மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும், இந்தப் பிரச்சனையை நுகர்வோரான நாமே சரிசெய்ய முடியும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. முறையான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பலர் தங்களின் மின்கட்டணத்தைக் குறைத்துள்ளனர்.
அதற்கு நீங்கள் முதலில் மின்சார வாரியத்தின் 24/7 வாடிக்கையாளர் சேவை மைய எண்ணான 94987 94987-க்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம். அல்லது, அதே எண்ணிற்கு (94987 94987) வாட்ஸ்அப் (WhatsApp) மூலமாகவும் உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம்.
அல்லது 1912 என்ற EB உதவி எண்ணுக்கு போன் செய்து புகார் செய்யலாம்.
மேற்கண்ட வழிகளில் புகார் அளித்தும் எவ்வித முன்னேற்றமும் இல்லை எனில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் (TNPDCL) அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று உள்நுழைய (Log in) வேண்டும்.
அங்கு, உங்களின் மின் அளவீடு மற்றும் கட்டணம் (Electricity reading and payment history) செலுத்திய விவரங்கள் அனைத்தும் இடம்பெற்றிருக்கும். அந்த விவரங்களைப் பதிவிறக்கம் செய்து, உங்கள் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்று எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்க வேண்டும்.
முந்தைய மாதத்தின் கட்டண விவரங்களையும், தற்போதைய கட்டண விவரங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து, கணக்கீட்டில் ஏதேனும் முரண்பாடுகள் (Mismatch) உள்ளனவா என்பதைச் சரிபார்க்குமாறு அதிகாரிகளிடம் கோரலாம். உங்கள் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள மின் அளவியின் (Meter) செயல்பாட்டில் சந்தேகம் இருந்தால், அதனைப் பரிசோதிக்கக் கோரிக்கை விடுக்கலாம். அதன்பேரில், மின்வாரிய அலுவலர் நேரில் வந்து பரிசோதிப்பார்; அதில் ஏதேனும் கோளாறு இருப்பது உறுதிசெய்யப்பட்டால் உங்களின் மின் கட்டணம் நிச்சயமாகக் குறைக்கப்படும்.
சரியான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில், தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போது புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
வீடுகளுக்கு வழங்கப்படும் மின் கட்டணத்தில் அதிகப்படியான மாறுபாடுகள் அல்லது தவறான கணக்கீடுகள் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின்கட்டண உயர்வு குறித்துப் புகார் தெரிவிக்கும் நுகர்வோரின் கோரிக்கைகளை மறுஆய்வு செய்த பின்னரே, அவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே, மின் கட்டணம் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக வந்தால் பொதுமக்கள் பதற்றப்பட வேண்டாம். அதேசமயம் அதிக பில் வந்திருப்பதை கண்டுகொள்ளாமல், புகார் அளிக்காமல் அப்படியே கட்டணத்தைச் செலுத்திவிட்டால், அடுத்தடுத்த மாதங்களிலும் இதே போலத் தவறான பில்லிங் (கூடுதல் கட்டணம் ) தொடர வாய்ப்புள்ளது.
ஆகவே, சந்தேகம் இருந்தால் உடனடியாக மின்வாரியத்திடம் புகார் அளித்து, கட்டணத்தை மறுஆய்வு செய்த பின்னரே கட்டணத்தைச் செலுத்துவது சிறந்ததாகும்.