

தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணம் திடீரெனப் பன்மடங்கு உயர்ந்ததாக எழுந்த புகார்களும், அதனால் பொதுமக்கள் அடைந்துள்ள அதிர்ச்சியும் தற்போதைய முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளன. கோடைக்கால மின் பயன்பாடு மற்றும் புதிய ஸ்லாப் முறைகள் காரணமாகப் பல வீடுகளுக்கு வழக்கத்தை விட 3 முதல் 4 மடங்கு வரை கூடுதல் கட்டணம் வந்துள்ளதாகப் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதங்களை விட தங்களுக்கு மின்சாரக் கட்டணம் பல ஆயிரம் ரூபாய் அதிகமாக வந்துள்ளதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
200 யூனிட் வரை இலவச மின்சாரம் போன்ற அறிவிப்புகள் இருக்கும் சூழலில், பல வீடுகளுக்குக் கட்டணம் பன்மடங்கு உயர்ந்தது ஏன் என்று பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
அதேசமயம் தமிழ்நாட்டில் நிலவும் அதிக ஈரப்பதமான வானிலை காரணமாக வீடுகளில் மின் பயன்பாடு திடீரென அதிகரித்துள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மின்விசிறி, குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரிப்பதால் சில வீடுகளில் முந்தைய மாதத்தைவிட மின் நுகர்வு அதிகமாகியுள்ளது.
பொதுமக்களின் தொடர் புகார்களை அடுத்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) கட்டணக் கணக்கீட்டு முறையில் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
முந்தைய மாத மின்சாரக் கட்டணத்துடன் ஒப்பிடும்போது அதிக வித்தியாசம் இருந்தால், அந்த மின் இணைப்பின் கட்டணத்தை கள ஆய்வுக்கு அனுப்பும் நடைமுறையில் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
இதன்படி, மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறை தடுக்க, முந்தைய கட்டணத்தை விட வித்தியாசம்,3,000-க்கும் அதிகமாக கட்டண வித்தியாசம் இருந்தால் மட்டுமே அந்த மின் கட்டணம் மறு ஆய்வுக்காக தற்காலிகமாக நிறுத்தப்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வீடுகளுக்கு இரு மாதங்களுக்கு ஒரு முறை நேரில் சென்று, மீட்டரில் பதிவாகி உள்ள மின் பயன்பாட்டை, வாரிய பணியாளர்கள் கணக்கு எடுக்க வேண்டும். சில இடங்களில் நேரில் செல்லாமல் உத்தேசமாக கணக்கு எடுப்பதால் குறைந்த மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளிலும், அதிக மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, தவறாக கணக்கு எடுப்பதை தடுக்க, இம்மாதம், 5ம் தேதி முதல் புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில், 500 யூனிட்டிற்கு மேல் மின்சாரம் பயன்படுத்தியவர்களின் வீடுகளில், இம்மாதமும், அடுத்த மாதமும் மின் பயன்பாடு கணக்கு எடுக்கும் போது, கட்டண வித்தியாசம், 20 சதவீதம் அதிகமாக இருந்தால், அந்த வீடுகளுக்கான மின் கட்டண, 'பில்' உருவாக்கம் நிறுத்தி வைக்கப்படும்.
பின்னர், வித்தியாச தொகைக்கு ஏற்ப, அதிகாரிகள் நேரில் சென்று அந்த வீடுகளில் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், சுமார் 60,000 வீட்டு மின் இணைப்புகளின் கட்டணங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இவ்வாறு நிறுத்தப்பட்ட மின் இணைப்புகளில் கடந்த 10 நாட்களில் 29,300-க்கும் மேற்பட்ட இணைப்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதில் வெறும் 100 மின் கட்டணங்களில் மட்டுமே கணக்கீட்டுப் பிழைகள் கண்டறியப்பட்டதாக தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில், ஆய்வு செய்யப்பட்ட மின் இணைப்புகளில் பிழைகள் கண்டறியப்பட்ட விகிதம் 0.34 சதவீதம் மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பல இணைப்புகளில் கட்டண உயர்வு உண்மையான மின்சாரப் பயன்பாடு அதிகரித்ததால் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இனி முந்தைய மின் கட்டணத்தை விட ரூ.3,000க்கு மேல் வித்தியாசம் இருந்தால் மட்டுமே, 'பில்' தயாரிப்பு 'பிளாக்' செய்யப்படும் வகையில் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய நடைமுறையில், முந்தைய கணக்கீட்டுடன் ஒப்பிடும்போது கட்டண வித்தியாசத்தின் அளவைப் பொறுத்து வெவ்வேறு நிலை அதிகாரிகள் மின் கட்டணங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
அதற்கு ஏற்ப, ரூ.3,000 முதல் ரூ.10,000 வரை வித்தியாசம் உள்ள இணைப்புகளில் வருவாய் மேற்பார்வையாளரும், ரூ.10,001 முதல் ரூ.15,000 வரை கணக்கீட்டு அலுவலரும், ரூ.15,001 முதல் ரூ.20,000 வரை உதவி கணக்கு அலுவலரும், ரூ.20,000க்கு மேல் உதவி பொறியாளரும் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மின் கட்டணம் நிறுத்தப்பட்ட நாளிலிருந்து 5 நாட்களுக்குள் மறு ஆய்வு பணியை முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கட்டணத்தில் பிழை இருந்தால் அதை விரைவாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க முடியும்.
புதிய நடைமுறையின் மூலம் உண்மையான மின் பயன்பாடு அதிகரித்த வீடுகளின் கட்டணங்கள் தேவையில்லாமல் மறு ஆய்வுக்கு அனுப்பப்படுவது குறையும் என்பதுடன் மின் வாரிய ஊழியர்களின் கூடுதல் பணிச்சுமையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.